வியாழன், 8 ஜூலை, 2010

மூங்கில்

மூங்கில் நெல்

நாம் வளர்க்குற மரங்கள் பூத்து, காய்க்கிறத பாத்திருக்கோம். ஆனா மூங்கில் மரம் பார்த்திருந்தாலும் அது பூ பூத்ததை பார்த்ததில்லை. மூங்கிலில் பூ, காய் அப்படி நினைச்சுகூட பாத்ததில்லை.
 கொல்லிமலைல இருக்கிற மூங்கில் தோப்பு பூத்து குலுங்குது  அதிலிருந்து நெல் கிடைக்குதுனு  கொல்லிமலைஅடிவாரத்திலேயே மூங்கில் தோப்பு உள்ளது.  மலைக்கு மேலே செல்லும் சாலையின் இருபக்கத்திலும் வளர்ந்து நேராக, உயரமாக நின்ற மரங்கள் இப்போது பூத்து வளைந்து நிற்பது மிகவும் அழகாக உள்ளது.
மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும்.
இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. அங்குள்ள மக்கள் அதை சமைத்து சாப்பிடலாம் . 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும். இப்போதுதான் பூத்துள்ளது, இன்னும் ஒரு மாதம் ஆகும் காய்த்து விழுவதற்கு
மரங்கள் இலைகள் எல்லாம் உதிர்ந்து கணுக்களில் பூக்களையும் இளம் பிச்சு காய்களையும் சுமந்து நிற்கின்றன. இது போன்ற மூங்கில் பூக்களுடன் அந்த பகுதியே வெளிர்மஞ்சள் நிறமாக, மாலை நேரத்தில் மிகவும் அழகாக இருந்தது.

 இங்கு மலையில் அடிப்பகுதியில் மட்டும் தான் மூங்கில் மரங்கள் உள்ளன. இதில் பெருவாரை, சிறுவாரை என இரண்டு வகையான மூங்கில்கள் உள்ளன. இங்கு உள்ளவை 1960 க்கு பின் நடப்பட்டவை, இப்போது முற்றி பூத்துள்ளன. இத்தோடு இதன் ஆயுட்காலம் முடிகிறது. காய்த்த பின் இந்த மரங்கள் காய்ந்துவிடும். இவற்றை வெட்டிவிடுவார்கள்

மூங்கில் நெல்லைப்பற்றி சங்க இலக்கியத்திலேயே உண்டு, பாரி வள்ளல் ஆண்ட "பிறான் மலை "மலைப்பகுதியில் மூங்கில் அதிகம் இருக்குமாம் , மூவேந்தர்கள் பாரியின் மீது படை எடுத்து முற்றுகை இட்டப்போது பல காலமாய் வெர்றிப்பெற முடியவில்லை, அப்போது அங்கு வந்த கபிலர் பாரியை எத்தனை காலம் முற்றுகை இட்டாலும் தோற்கடிக்க முடியாது , அவர்கள் உணவுக்கு மூங்கில், தேன், கனிகள் என ஏராளமாய் மலையில் உண்டு என்று சொல்லி புரவலர் போல போய் யாசகமாய் தேசத்தை கேளுங்கள் தருவார் எனப்பாடியுள்ளார்.

மூங்கில் அரிசியை - புட்டு போல - மூங்கில் குழாயில் வேகவைத்து, எலுமிச்சம்பழச்சாறு + இறால் அவியலோடு - தாய்லாந்தில் செய்கிறார்கள்...அருமை...!!!

மூங்கில் பூ பூத்தால் அந்த வருடம் துரதிஷ்டம் அல்லது அத்தவருடம் வெள்ளாமை சரியாக இருக்கது என்ற நம்பிக்கை பல இடங்களில் இருக்கிறது.

உண்மையில் அதற்கான காரணம் மூங்கில் அரிசி என்றால் எலிகளுக்கு ரொம்ப ஆசை. அதை உண்ண சுற்று வட்டார எலிகளெல்லாம் அங்கே குடி பெயர்ந்துவிடும். மூங்கில் அரிசி தீரும் வரை அங்கேயே குடும்பத்தை பெருக்கும்.

மூங்கில் அரிசி தீர்ந்துவிட்டால் அப்போது பல மடங்காக பெருகி இருக்கும் எலிக்கூட்டம் சுற்றுவட்டார விவசாயநிலங்களுக்குத்தான் படையெடுக்கும். அப்போது கண்டிப்பாக அந்த வருட விவசாயம் வழக்கத்தை விட அதிக சேதாரத்தைத்தான் சந்திக்கும்.

இதுதான் மூங்கில்பூத்தால் ஆகாது என்ற வழக்கை
காகிதமாகும் மூங்கில் மரங்கள்
மனிதர்களின் பல்வேறு தேவைகளை மூங்கில்கள் ஈடு செய்கின்றன. மூங்கில் கொம்பு, பாய், அரிசி, காகிதம் என பல பயன்கள் மூங்கில்கள் மூலம் கிடைக்கின்றன. கொல்லிமலையில், அடிவாரம் முதல் உச்சி வரை காடுகள் நிறைந்துள்ளன. இங்கு, மூங்கில்கள் அதிகம். மலை உச்சியில் மட்டுமின்றி மலை துவங்கும் அடிவாரமான காரவள்ளியிலும் அடர்ந்த மூங்கில் காடுகள் உள்ளன. மொத்தம் 461 எக்டேர் வீதம் ஆயிரத்து 152 ஏக்கர் பரப்பளவில் இந்த மூங்கில் வனம் அமைந்துள்ளது. மூங்கில் மரங்கள் 40 ஆண்டுகளை கடந்தால் அவற்றில் பூப்பூக்க துவங்கிவிடும். பின், அம்மரங்கள் காய்ந்து விடும். இதுபோல், 80 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் வளர்ந்துள்ள மூங்கில் மரங்கள் தற்போது காய்ந்த நிலையில் உள்ளன. அவற்றை, காகிதம் தயாரிப்பதற்காக தமிழ்நாடு காகித தயாரிப்பு நிறுவனத்தினர் வெட்டி எடுத்து வருகின்றனர்
நோய் தீர்க்கும்  மூங்கில் மரம்

வானத்தில் வில் வடிவத்தில் ஐந்து நட்சத்திரக் கூட்டம் ஒன்று இருக்கிறது. இதற்குப் புனர்பூசம் நட்சத்திரம் என்று பெயர். இது புதன் கிரகம் மிதுனம் ராசியுடன் தொடர்பு கொண்டது. புதன் கிழமை பிறந்தவர்களையும் மே 21 முதல் ஜூன் 20 வரை பிறந்தவர்களையும் ஆட்டிப் படைக்கும் நட்சத்திரமாகும். மேற்கண்ட நாட்களில் புனர்பூசம் நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகள் பூமியை நோக்கி வரும். 
அதை மூங்கில் மரங்கள் தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும். அதுவே அம்மரத்தின் நற்குணமாகக் காணப்படுகின்றன.புனர்பூசம் நட்சத்திரம் சிலசமயம் கெட்ட மின்கதிர்களையும் வீசும். அது மனிதர்களுக்கு பலவகையான உடல் பிரச்சினைகளையும், மனப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நோய்களையும் தீர்த்து வைக்க மூங்கில் மரம் உதவுகிறது.  புனர்பூசம் தோஷம் நீங்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினசரி 30 நிமிடங்கள் மூங்கில் மரத்தைக் கட்டிப்பிடிக்கலாம். இதனால் புனர்பூசம் நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகள் நீங்கி நோய்கள் குணம் பெறுகின்றன. நல்ல கதிர்வீச்சுகள் மனித உடலுக்கு மாற்றலாகிவிடுகிறது. இம்மரத்தின் நிழலிலும் உட்காரலாம். இதனால் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் கிடைக்கிறது. புனர்பூசம் நட்சத்திரம் கொண்டவர்களுக்குத் தொடர்புள்ள நோய்கள்:தொழுநோய், தோல்நோய்கள், தோல் வெளுத்து விடுதல், மூட்டுவலி, வலியுடன் கூடிய மாதவிலக்கு வெளியேறுதல், வாயுத் தொல்லை, குடல் புழுக்கள், சிறுநீர்க்குறைவு, உடல் பலவீனம், இரத்த சோகை, நாள்பட்ட காய்ச்சல், ஆண்மை சக்தி குறைபாடு போன்றவையாகும். 
மூங்கில் மரத்தின் மருத்துவ குணங்கள்:  இலைகள்:  இதன் இளந்தளிர்கள் ஐந்து கிராம் அளவில் எடுத்து ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் கஷாயத்தைக் குடிப்பதால் மாதவிலக்குக் காலங்களில் வரும் வலிகள், நாக்குப் பூச்சித் தொல்லைகள், இரத்த வாந்தி, வயிற்றுப் புண், மூட்டுவலி, ஆஸ்துமா, மூட்டுவலி, பக்கவாதம், நாள்பட்ட காய்ச்சல், கண்நோய்கள், பித்த நோய்கள் மற்றும் சர்க்கரை நோய்க்கு குடிக்கச் செய்வார்கள்.  விதைகள்:  ஒரு கிராம் விதையைத் தினசரி இரண்டு வேளை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது.வேர்:வேரை எரித்துப் பவுடராக்கி ஏழு கிராம் அளவில் எடுத்து எண்ணெயில் கலந்து பூசினால் அம்மைத் தழும்புகள் நீங்குகின்றன. வழுக்கைத் தலை, சொறி, சிரங்குகள் குணம் பெறுகின்றன.மூங்கிலுப்பு: முற்றிய மூங்கிலைப் பாதியாகப் பிளந்தால் வெள்ளை நிறப் பொருள் கிடைக்கும். இதற்கு மூங்கிலுப்பு என்பார்கள். இதை ஒரு கிராம் முதல் ஐந்து கிராம் வரை தினசரி சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு, தலை சுற்றல், வயிற்றுப் புண், பித்த வாந்தி குணம் பெறுவதுடன் இதயம், வயிறு, கல்லீரலுக்கு வலிமையும் தருகிறது.  மூங்கில் உப்பைப் கொண்டு பிரபல யுனானி மருந்து கம்பெனிகளில் காஃபூரி லூலுயி, குர்úஸ தபாஷீர், ஜவாரிஷ் தாபஷீர் என்ற பெயர்களில் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதையும் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தலாம்.  வானவியல் மூலிகைத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது.

மூங்கில்

மூங்கில
கியோத்தோ யப்பானிலுள்ள மூங்கில் காடு
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
பிரிவு: பூக்கும் நிலைத்திணை
வகுப்பு Liliopsida
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
துணைக்குடும்பம்: Bambusoideae
Supertribe: Bambusodae
Tribe: Bambuseae
Kunth ex Dumort.




மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும். சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட இனவகை மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன. உண்மையில் மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு மரம் தான். மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் அதிக அளவு பருமன் 1 சென்ட்டிமீட்டரிலிருந்து 30 சென்ட்டிமீட்டர் வரை இருக்கும். மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு மரம். ஒரு மூங்கில் மரத்தின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அது 60 அடி உயரம் வரை வளரும் காலமே 59 நாட்கள்தான். கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும். எனவே மலைச்சரிவுகளும், மிக வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்ற இடங்கள்.
சீனா, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா,நேப்பாள்,பங்களாதேஷ், கோஸ்டிரிக்கா, கென்யா ஆகிய நாடுகள் மூங்கில் உற்பத்தியில் முன்னணி நாடுகள். இந்தியாவில் 156 வகை மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள் முதலிடம் பெற்று நிற்பவை. மூங்கிலின் வேர் நிலத்தை ஒரு அடிக்குமேல் பற்றிக் கொண்டிருக்கும். மூங்கில் ஒன்றோடொன்று இணைந்து வளரும் தொகுப்பு 6 கியூபிக் மீட்டர் வரை இருக்கும்.

பயன்கள்

மூங்கில் குடிசை வீடுகள் கட்டுவதில் மரமாகவும், கட்டிடம் கட்டும் தொழிலிலும், கைவினைப் பொருட்கள் செய்யவும், சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்களிலும் மிக முக்கிய பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 1500 பயன்களுக்கு மேல் தரக்கூடிய மூங்கில் மரத்திலிருந்து இன்றும் கூட பலப் பயன்களைப் பெற முடியும் என்று வேளாண் ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் வளர்க்கப்படும் மூங்கிலில் 40 சதவீதம் மரக்கூழ் செய்யவும், காகிதத் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மற்றவை ஒன்று சேர்க்கப்படாத பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

மூங்கில் சிறந்த மரம்!
மூங்கில் என்பது மரமா அல்லது புல் வகையை சேர்ந்ததா என்று கேட்டால், அது புல் வகையை சேர்ந்ததுதான். மூங்கில் வெகு வேகமாக வளரும் தாவரம். இதை முழுமையாக வளர விட்டால், 120 அடி உயரம் வளரும்.
இதன் முக்கியமான வேர்த்தண்டுகள், நிலத்தடியில் பதிந்திருக்கும். இவற்றில் இருந்து மூங்கில் கிளைகள் வெளிக்கிளம்பும். இதுவரை 500 விதமான மூங்கில் வகைகளை கண்டுபிடித்துள்ளனர். மூங்கில் எந்த வகை என்றாலும் சரி, அதன் தடிப்பகுதி வழுவழுப்பாகவும், திடமாகவும் இருக்கும்.
சில மூங்கில்கள் ஆண்டுக்கொருமுறை பயனளிக்கிறது. சில வகை மூங்கில்கள், நூற்றாண்டுகளில் மூன்று, நான்கு முறை பயனளிக்கிறது.
மூங்கில்கள் - வீடுகள், குடிசைகள் கட்டவும், கூரைகள் வேயவும், வரிசையாக சுவர் போல் அமைக்கவும், பாய்களும், கூடைகளும் செய்யவும் என பல வகைகளில் பயன்படுகின்றன. காகிதம் தயாரிக்க மூங்கில் முக்கியமாக தேவைப்படுகிறது.
பல நாடுகளில், மூங்கில் குருத்தை சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். ஜப்பான் நாட்டில் தோட்டக்கலை நிபுணர்கள், மூங்கிலை நீர்க்குழாயாக பயன்படுத்துகின்றனர். தென்கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் பசிபிக் கடலை சார்ந்த தீவுகளில், மூங்கில் பெரும் அளவில் காணப்படுகிறது.
சில வகை மூங்கில்கள், வேர் பகுதியில் வளர்ச்சி ஏற்பட்டு, அதில் ஒரு வகையான விஷப்பொருள் உருவாகும். இதை காசாக மாற்றுகின்றனர். சில வகை மூங்கில்களில், "சிலிக்கா' என்ற பொருள் கிடைக்கிறது.
ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். எனவே, மூங்கில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறந்த மரம் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மூங்கில் மரங்களை வளர்த்தால் காற்று மண்டலம் தூய்மைப்படும் என்கின்றனர் உலக சுற்றுச்சூழல் வல்லுனர்கள். எனவே, மூங்கில் வளர்த்து சுற்றுச் சூழலை பாதுகாப்போம்.



 
 
 
சூழலைக் காக்கும் பீமா மூங்கில்
மு.குருமூர்த்தி
Beema 
Moongil 
































'குரோ மோர் பயோடெக்' நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் திரு என்.பாரதி என்பவர் குளோனிங் முறையில் வாழை, கரும்பு, மூங்கில், சவுக்கு, சோற்றுக்கற்றாழை, சீனித்துளசி போன்றவற்றை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். தமிழக அரசுக்கு மூங்கில் வளர்ப்பது தொடர்பான ஆலோசகர் அவர்.

இவர் கண்டுபிடித்துள்ள பீமா மூங்கில் அடர்த்தியானது. அதனால் இயற்கையிலேயே வலிமையானது. சுற்றுப்புறத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை இழுத்துக் கொள்ளும் ஆற்றல் பீமா மூங்கிலுக்கு நான்கு மடங்கு அதிகம். ஓர் ஏக்கரில் உள்ள மற்ற மரங்கள் 15 டன் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்வதாகக் கொண்டால் ஓர் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பீமா மூங்கில் 70 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறதாம்.

இப்போது உலகம் வெப்பமடைவதற்குக் காரணம் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற தொழில்வள நாடுகள்தான். உலகின் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் இதுபோன்ற நாடுகள் அவை வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவிற்கு ஏற்ப மரங்களை வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டபோது அமெரிக்கா தவிர பிற நாடுகள் ஒப்புக்கொண்டன. அதன்படி உலகின் எந்த மூலையில் மரங்களை வளர்த்தாலும் அதற்கான செலவினத்தை மேலே சொன்ன நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பீமா மூங்கிலை இந்தியாவில் பயிர் செய்தால் பெருமளவு அன்னிய உதவி நமக்குக் கிடைக்கும் என்கிறார் திரு என். பாரதி. பீமா மூங்கிலின் அளப்பரிய பயன்களை பட்டியல் போடுகிறார் திரு. என். பாரதி.

அனல் மின்சாரநிலையங்களில் பயன்படும் நிலக்கரி ஒரு டன் ஆறாயிரம் ரூபாய். அனல் மின்சார நிலையங்களில் பீமா மூங்கிலைப் பயன்படுத்தினால் ஒரு டன் இரண்டாயிரம் ரூபாய். நிலக்கரியை எரிப்பதால் காற்றுமண்டலத்தில் கலக்கும் கார்பனின் அளவைவிட இருபது மடங்கு குறைவான கார்பன் மட்டும்தான் மூங்கிலை எரிப்பதால் வெளியாகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும்போது மூலப்பொருட்களுடன் பாதியளவு மூங்கில் இழைகளைக் கலந்து தயாரிக்கலாம் என்று பெங்களூரில் உள்ள ' இந்தியன் வுட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' கண்டுபிடித்துள்ளது. இதனால் பெட்ரோலின் உபயோகம் குறையும். மூங்கிலில் இருந்து பஞ்சு தயாரிக்க முடியுமாம். ஒரு ஏக்கர் பருத்தியில் 500 கிலோ பஞ்சு கிடைக்குமானால் ஒரு ஏக்கர் மூங்கிலில் 10 ஆயிரம் கிலோ பஞ்சு கிடைக்குமாம்.

பெரிய நிறுவனங்கள் செயற்கை இழைகள் தயாரிக்க யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கின்றன. பூமியின் நீராதாரத்தை வற்றச் செய்யும் பகாசுரன்கள் இவை. ஆனால் மூங்கில் மரங்கள் நீர் வளத்தை அழிப்பதில்லை. அரசு மூங்கில் வளர்ப்பதற்கு மானியம் தருகிறது. மானியத்தைப் பயன்படுத்தி மூங்கில் வளர்ப்பதற்கு தமிழக விவசாயிகள் முன்வர வேண்டுமென்கிறார் இந்தத் தமிழர்

மூங்கில் ஒவ்வொரு முளை விடும் போதும்
ஒரு சத்தம் கொடுக்கும் என்று சொல்கிறார்கள்
அதே போல
தென்னம் பாளையில் பூக்கள் மலரும் போது ஒரு சத்தம் கொடுக்கும் என்றும் அனுபவஸ்தர்கள் சொல்லுகிறார்கள்
ஆகவே பெரியவர்கள் சொல்வதையும் கேட்போம்
மரங்கள் வளருவதை பார்ப்போம், , மரம் வளருவதையும் கேட்போம் இயற்கையோடு இசைந்து வாழ்வோம்
ஆமாம் மூங்கில் குருத்துகள் வரும்போது கேட்கும் சத்தம் மத்தளமாகவும், மூங்கில் துளைகளின் வழியே பயணப்படும் காற்று ஊதும் குழலாக மாறி அளிக்கும் ஊதுகுழலின் நாதத்தையும் ரசித்து இசை பட வாழ்வோம்
ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி
மூங்கில் போல் முடிவில்லாது வாழ்வோம்
கவையாகி கொம்பாகி காட்டகத்தே
நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்
சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்
குறிப்பரிய மாட்டாதவன் நன் மரம்
என்று ஔவையார் கூறியபடி

லேப்டாப் தயாரிக்க மூங்கில் மரம் பயன்படுகிறது
















பிளாஸ்டிக், உலோகத்திற்கு பதிலாக மூங்கிலை பயன்படுத்தி மடிக்கணினிகள் (லேப்டாப்) தயாரிக்க தைவான் நாட்டு கம்பயூட்டர் உற்பத்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் புதிய மூங்கில் மடிக்கணினியை உருவாக்கியுள்ள அசுஸ்டெக் நிறுவனம், அதற்கு அசுஸ் ஈகோ புக் (Asus Eco Book) என பெயரிட்டுள்ளது.

மடிக்கணினி திரை மற்றும் மைக்ரோ பிராசசரில் ஏற்படும் வெப்பத்தை தங்கக் கூடிய தன்மை மூங்கில்-க்கு உள்ளதா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், இது முற்றிலுமான வெற்றியடைந்த பின்னரே வர்த்தக ரீதியாக மூங்கில் மடிக்கணினிகள் விற்பனைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மடிக்கணினிகள் மற்றும் கணினி தொடர்பான உபகரணங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் நிலையில், மூங்கிலை கொண்டு மடிக்கணினி தயாரிக்கும் பணியை அசுஸ்டெக் நிறுவனம் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூங்கில் கடல் என்னும் இயற்கைக் காட்சி மண்டலம்

சிசுவான் மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள மூங்கில் இயற்கைக் காட்சி மண்டலம், சிசுவான் மாநிலத்தின் யீ பினின் புறநகரில் அமைந்துள்ளது. மூங்கில் இயற்கைக் காட்சியை முக்கிய தனிச்சிறப்பியல்பாக கொண்டு, தொல் பொருட்களுடைய காட்சி இடமாகும். இதன் பரப்பளவு, 120 சதுரக் கிலோமீட்டராகும். இம்மண்டலத்தில், 70 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட பரப்பில் மூங்கில்கள், சுமார் 500 மலைகளில் நிறைந்து, பச்சைக் கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால், இது, மூங்கில் கடல் என்று அழைக்கப்படுகிறது. இம்மண்டலத்தின் பணியாளர் லின் வேய் கூறியதாவது:

இந்த மூங்கில் கடலில், NAN மூங்கில், மிகவும் அதிகமாகும். இந்த வகை மூங்கில், ஆண் மற்றும் பெண் இனங்கள் கொண்டது. அனுபவம் மிக்க விவசாயிகள், ஆண் மூங்கிலையும் பெண் மூங்கிலையும் அடையாளம் கண்டுக் கொள்ளலாம். மூங்கிலின் முதலாவது கிளையைப் பார்த்து, தனியாக ஒரு கிளை உள்ள மூங்கில், ஆண் மூங்கிலாகவும், இரு கிளைகள் உள்ள மூங்கில், பெண் மூங்கிலாகவும் வேறுபடுத்தப்படுகின்றன என்றார் அவர்.
இந்த மூங்கில் இயற்கைக் காட்சி மண்டலத்தில், 400க்கு அதிகமான வகை மூங்கில்கள் உள்ளன. NAN மூங்கில் தவிர, பல அரிய மூங்கில் வகைகள், உண்டு. இதில், மனித முகத்தைப் போன்ற மூங்கில், குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மூங்கிலின் கனுக்கள், மட்டமாக வளர்கின்றன. மனித முகத்தைப் போன்ற மூங்கிலின் கனு, சாய்வாக வளர்கிறது.

ஒவ்வொரு கனும், குழந்தையின் முகத்தைப் போன்றது. வழிகாட்டிகள் அறிமுகப்படுத்தாத வரை, மூங்கில் கடலில் முதல் முறை சென்று பார்வையிரும் பயணிகள், இதை மூங்கிலாக கருதப் போவதில்லை.
இந்த மூங்கில் இயற்கைக் காட்சி மண்டலத்தில், மூங்கில் அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. இதில் 58 அரிய மூங்கில் வகைகள் காணப்படலாம். 1986ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்ட இந்த மூங்கில் அருங்காட்சியகம், சீனாவில் முதல் சிறப்பு மூங்கில் அருங்காட்சியகமாகும். அதன் முக்கிய கட்டிடங்களின் பரப்பளவு, 3800 சதுர மீட்டராகும். பல்வேறு வகை மூங்கில் மாதிரிகள், மூங்கில் ஆயுதங்கள், மூங்கில் இசைக் கருவிகள் முதலிய மூங்கில் கலைப்பொருட்கள், இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம், சிசுவான் மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள மூங்கில் கடலின் தரமிக்க மூங்கில்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை என்று லீன் வேய் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:

இது, சீனாவில், மூங்கிலை முதன்மையாகக் கொண்ட முதலாவது சிறப்பு அருங்காட்சியகம் ஆகும். உலகளவில் மிக சிறிய மூங்கில் வகையான CUI மூங்கில், ஒட்பீட்டளவில் உயரமான NAN மூங்கில் முதலியவை இதில் இடம்பெறுகின்றன என்றார் அவர்.
இந்த அருங்காட்சியகத்தின் நுழைவாயிலிருந்து வெளியே சென்று, காட்சி மண்டலத்தின் பாதையில் நடந்து சென்றால், "கடலுக்குள்ளே கடல்"என்னும் மற்றொரு காட்சியிடத்துக்கு வந்தடையும். அதன் நுழைவாயில், சிசுவான் பிரதேசத்தின் பாரம்பரிய வளைவின் வடிவத்தை மாதிரியாக கொண்டு கட்டியமைக்கப்பட்டது. சிசுவான் மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள மூங்கில் இயற்கைக் காட்சி மண்டலத்தின் பள்ளத்தாக்கில் "கடலுக்குள்ளே கடல்" என்னும் காட்சி இடம், அமைந்துள்ளது. சுமார் 40 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவான இந்த ஏரி, மூங்கில் கடலிலுள்ள ஒரு சிறிய கடல் போன்றது. எனவே, இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. பயணியர்கள், மூங்கில் கட்டுமரம் மூலம், ஏரியைச் சுற்றுவந்து காட்சிகளைக் கண்டு களிக்கலாம் என்று, வழிகாட்டி HU TONG LIN கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

நான் இப்போது பெரிய மூங்கில் கடலில் இருக்கின்றேன். இந்த ஏரியை கடலாக, உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். படகில் இந்த ஏரியைச் சுற்றிப் பார்த்தால், சுற்றி எங்கும் மூங்கில் நிறைந்து காணப்படும் என்றார் அவர்.

புதன், 7 ஜூலை, 2010

விவசாயிகளுடன் விளையாடும் மான்சாண்டோ: வேடிக்கை பார்க்கும் அரசு!


உலகில் பருத்தி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பருத்தி ஏற்றுமதியிலும் இந்தியாவுக்கு 2-வது இடம். ஆண்டுக்கு 240 லட்சம் பேல்கள் பருத்தி (ஒரு பேல் என்பது 170 கிலோ பருத்திப் பொதி) இந்தியாவில் உற்பத்தியாகிறது. 90 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுகிறது. பருத்தியை நம்பி 40 லட்சம் விவசாயக் குடும்பங்கள் வாழ்கின்றன.
ஆனால், பருத்தி விவசாயிகளுடன்தான் விளையாடுகிறது மான்சாண்டோ நிறுவனம். இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

மான்சாண்டோ நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு பி.டி. பருத்தி வகையை அறிமுகம் செய்தது. பல்வேறு நோய்களைத் தாங்கி வளரும் என்றும், இதில் மரபீனியிலேயே புழுக்களை அழிக்கும் மூலக்கூறுகள் இருப்பதால் புழுத்தாக்குதல் இருக்காது என்றும் சொல்லி விற்பனை செய்தது. பருத்தி, ஆடைக்குத்தானே பயன்படுகிறது; இதனால் மனிதருக்கு என்ன பாதிப்பு என்று மான்சாண்டோவுக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன. இருந்தாலும்கூட, இந்த பி.டி. பருத்தியில் கிடைக்கும் பருத்திப் பிண்ணாக்கை மட்டுமல்ல, பருத்தி இலையைத் தின்னும் ஆடுகள்கூட இறக்கின்றன. இந்த ஆடுகளின் பால் மனிதருக்குக் கேடு விளைவிக்கும் என்றெல்லாம் கூட இயற்கை விவசாயப் போராளிகள் குரல் கொடுத்து ஓய்ந்துபோனார்கள்.

இப்போது மான்சாண்டோ நிறுவனம் ரொம்ப நியாயஸ்தன் போல ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதாவது, "குஜராத்தில் நடத்திய கள ஆய்வுகளில், இளஞ்சிவப்பு புழுக்களை எதிர்த்து வளரும் சக்தியை பி.டி. பருத்தி விதைகள் இழந்துவிட்டன. இந்தப் புழுக்கள் தங்களுக்குள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டுவிட்டதால் இனிமேல் பி.டி. பருத்தியில் 2-வது ரகத்தை விவசாயிகள் வாங்குவதுதான் நல்லது' என்று யாரும் கேட்காமலேயே அறிக்கை வெளியிட்டுள்ளது.

மான்சாண்டோ இந்த அறிக்கையை நியாயஸ்தன் போல வெளியிட்டாலும் இதன் மூலம் இரண்டு விஷயங்கள் அம்பலப்பட்டு இருக்கின்றன. ஒன்று, புழு, பூச்சித் தாக்குதலைத் தாங்கி வளரும் என்பது வெறும் பொய்தான். இரண்டாவது, இது ஒரு வியாபார உத்தி. காப்புரிமை பெற்ற பி.டி. விதைகளுக்குக் குறிப்பிட்ட காலம்வரைதான் உரிமத்தொகையைக் காட்டி விலை நிர்ணயம் செய்ய முடியும். குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர், அந்த விதைக்கான உரிமத்தொகை பெறும் உரிமை காலாவதியாகிவிடும். ஆகவே, தற்போது புதிய ரகம் என்ற பெயரில் பி.டி.பருத்தியின் இரண்டாவது ரகத்தை மான்சாண்டோ அறிமுகம் செய்கிறது. முதல் ரகம் தகுதியற்றது என்று சொல்வதன் மூலம் விவசாயிகள் அனைவரும் இரண்டாவது ரகத்துக்கு மாறியே ஆக வேண்டும்.

இந்த உத்தி இந்தியாவுக்குப் புதிது. அமெரிக்காவுக்குப் பழையது. உலகில் 90 சதவீத உயிரி-தொழில்நுட்பப் பயிர்களைக் கையாளும் மான்சாண்டோ, அமெரிக்காவில் அறிமுகம் செய்த மரபீனி மாற்றப்பட்ட சோயாபீன் விதைகளுக்கான உரிமத்தொகை பெறும் உரிமை 2014-ல் முடிகிறது. ஆகவே, அங்கேயும் புதிதாகக் காப்புரிமை பெற்றுள்ள இரண்டாம் வகை சோயாபீன் விதைகளைப் பயன்படுத்த விவசாயிகளைத் தூண்டில் போட்டுக்கொண்டிருக்கிறது மான்சாண்டோ.

மத்திய பருத்தி ஆய்வுக் கழகத்துக்கு இதுபற்றி தாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தெரிவித்துவிட்டதாக மான்சாண்டோ நிறுவனத்தின் இந்திய இயக்குநர் கூறியபோதிலும், இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு இதுவரை தகவல் தெரியாது என்பது ஆச்சரியமான ஒன்று. இத்தகைய பி.டி. ரக விதைகளுக்கு அனுமதி அளிப்பதே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான். ஆனால் அவர்களுக்கு மான்சாண்டோ அறிக்கை வெளியிட்டு, பத்திரிகையில் வெளியான பிறகுதான் தகவல் தெரியும் என்றால், நம்ப முடிகிறதா!

வியாபாரத்துக்காக மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவுக்குள் புகுந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எந்தவொரு பி.டி. ரக பயிருக்கும் அனுமதி பெறலாம், திடீரென்று இந்த விதை சரியில்லை; ஆகவே எங்களுடைய அடுத்த தயாரிப்பு விதைகளை வாங்கு என்று சொல்லலாம், விலையை தானே நிர்ணயிக்கலாம் அல்லது தான் விரும்புகிற விலையை நிர்ணயிக்கும்படி மத்திய அரசை வளைக்கலாம்...ஆனால் விவசாயிகள்? தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பருத்தி உற்பத்தியில் உலகிலேயே இரண்டாம் நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணமோ பொறுப்போ இல்லாமல் மத்திய அரசு இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களை இந்திய விவசாயிகளிடம் நெருங்கவிடுகிறது. 40 லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை நாம் மேற்கொள்ளும் முடிவுகளில்தான் இருக்கிறது என்ற பச்சாதாபம்கூட அரசிடம் இல்லை. மான்சாண்டோ போன்ற நிறுவனங்களின் வியாபாரத்தை தடுத்து நிறுத்தவும் தெம்பில்லை.

இதே நிலைமைதான் பி.டி கத்தரியிலும் ஏற்படும் என்பது நிச்சயம். இப்போது பி.டி மக்காச்சோளத்தை நமது வேளாண் பல்கலைக்கழகத்தில் கள ஆய்வு நடத்தி உற்பத்தி செய்து வருகிறார்கள். இன்னும் 40 உணவுப் பயிர்களுக்கு ஆய்வுகள் நடக்கின்றன.

ஒரு விவசாயி, கிராமப்புறச் சூழலில் கிடைக்கும் காட்டுத்தழை, வீட்டுக்குப்பை, ஆடு மாடுகளின் சாணம் என்று வயலில் போட்டு, தனது மாடுகளைக் கட்டி உழுது, அறுவடை செய்து, அடுத்த சாகுபடிக்கு விதைநெல் எடுத்து வைத்து, மற்றதை விற்றுப் பணம் பார்த்து.... அந்த அமைதியான வாழ்க்கையை விரட்டுகின்றன மான்சாண்டோ நிறுவனங்கள். அதற்குத் துணை போகிறது அரசு.

இன்றைய விவசாயி ரசாயன உரத்துக்காகச் செலவிட வேண்டும். ரசாயன உரம் விற்போர் கொழிப்பார்கள். டிராக்டரையும், அறுவடை இயந்திரங்களையும் நம்பியே வாழவேண்டும். இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் விநியோகஸ்தர்களும் கொழிப்பார்கள். விதைகளுக்கும் மான்சாண்டோவைப் போன்ற நிறுவனங்களையே நம்பியிருக்க வேண்டும். இத்தனையையும் மீறி, மழை பெய்து, விளைந்தால், அதற்கும் நியாயமான விலை கிடைக்காது. விவசாயத்தை அழிப்பதற்கு இதைவிட நல்ல உத்தி இருக்க முடியுமா!

இதையெல்லாம் மீறி இந்தியாவில் விவசாயம் நடக்கிறதென்றால், மண்ணை நேசிக்கும் விவசாயிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதைத்தவிர வேறென்ன!

விவசாயிகள், குறிப்பாக தமிழக விவசாயிகள், தற்சார்பு தன்மைகொண்ட பாரம்பரிய விவசாயத்துக்கு மாறுவதைத் தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இயற்கை வேளாண்மைக் கொள்கையை தமிழக அரசு அறிவித்து, விவசாயிகளுக்கு புதிய பாதையைக் காட்ட வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

பசுமைப் புரட்சியின் கதை: எதில் பற்றாக்குறை? யாருக்குப் பற்றாக்குறை?


‘1960களின் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி எப்போது குறிப்பிட்டாலும், அது ‘உணவு உற்பத்தியில் பற்றாக் குறை’ என்றே பரவலாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் சுதந்திர இந்தியாவில் உணவு உற்பத்தி படிப்படியாக அதிகமானது; இந்த உணவு, விவசாயிகள் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட கிராமப் புறத் தொழிலாளர்களல்லாத, உணவுச் சந்தையை நம்பியிருந்த மற்றவர்களைச் சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. 1957இல் வெளிவந்த உணவு தானிய விசாரணைக் குழு அறிக்கை (Foodgrains Enquiry Committee Report) இதை நன்றாக விளக்கியிருக்கிறது. “. . . திட்டங்கள் சிறப்பான முறையில் அமல்படுத்தப்பட்டு அதன் விளைவாக உற்பத்தியும் அதிகரித்தது. ஆனால் சந்தையில் விளைபொருள்களின் இருப்பை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் உணவுப் பிரச்சினையைத் தீர்க்க இந்த விளைச்சல் உதவவில்லை” ஆக, உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமல்ல நம் அரசாங்கத்தின் பிரச்சினை. உற்பத்தியை நகர்ப்புறச் சந்தைக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பதுதான் அதன் மிகப் பெரிய கேள்வியாக இருந்தது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு, விவசாயியை உணவுச் சந்தையுடன் இணையச் செய்ய வேண்டும் என்பதுதான். அதற்கான ஒரு சின்ன யோசனை இதோ! விவசாயி (இடுபொருட்களுக்காக) கடன் வாங்கி விவசாயம் செய்தால், அவர் தன் கடனை உடனடியாக அடைப்பதற்காக, தானே தக்கவைத்துக்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொண்டு, ஒரு பெரும் பங்கைச் சந்தைக்கு விட்டுக் கொடுக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தலாமே!!
ராக்கஃபெல்லர், ஃபோர்டு ஃபவுண்டேஷன்கள் நம் அரசாங்கத்தின் முன்வைத்த தீர்வு, ‘ஏற்கனவே நல்ல வளமான நிலங்களில் இந்தப் பசுமைப் புரட்சி திட்டத்தைப் புகுத்தினால், மிகையாக வரும் விளைச்சல் தானாகவே நகர்ப்புறங்களை வந்தடையும்’ என்பதுதான். இப்படித்தான், இந்தப் பரிசோதனைக்கு பஞ்சாப் -ஹரியானா பகுதிகள் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தியாவில் பசுமைப் புரட்சி, ஏதோ ஓராண்டில் செயற்படுத்தப்பட்டு முடிக்கப்பட்ட ஒரு திட்டமல்ல. அது 1967இல் தொடங்கி 1978வரை பல திட்டங்கள் மற்றும் முயற்சிகளின் தொகுப்பாகும்.
கோதுமையில் “பசுமைப் புரட்சி”
மெக்ஸிகோவில் ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷனின் சர்வதேச கோதுமை மற்றும் மக்காச்சோளம் ஆராய்ச்சி மையத்திலிருந்து (CIMMYT) இறக்குமதியான 18,000 டன் லெர்மா ரோஜோ 64-கி, மற்றும் சொனோரா - 64 ஆகிய ரகங்களை 4 லட்சம் ஹெக்டேரில் பயிரிட்டு கோதுமையில் பசுமைப் புரட்சியைத் தொடக்கிவைத்தது இந்திய அரசு. ஆனால் இந்த ரகங்கள் ஆழ்ந்த சிகப்பு நிறமாக இருந்தமையால் அவற்றை இந்தியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். பிறகு நிறம் மாற்றி புதிய ரகங்களை வெளியிட்டனர். இந்த விதைகளை ஏற்கனவே மண் வளமும் நீர் வளமும் அதிகமாக உள்ள பஞ்சாப் - ஹரியானா மாநிலங்களில் பரவலாகப் பயிர்செய்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதே இந்திய அரசாங்கத்தின் திட்டம். குட்டை ரகக் கோதுமை விதைகளை நிலத்தில் விதைத்து, தேவையானபோதெல்லாம் நீர் கிடைக்குமாறு நீர்ப்பாசனத்தை அதிகரித்து, இரசாயன உரங்களை அள்ளிக் கொட்டி, பயிர்களுக்கு ஏற்பட்ட பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களை ஒழிக்க இரசாயனங்களைத் தெளித்து, பெரிய அளவுகளில் உழுது அறுவடைசெய்ய இயந்திரங்களை உபயோகித்து, “நிலம் பாருங்கள் அள்ளிக் கொடுக்கிறது!” என்று பசுமைப் புரட்சியில் தங்கள் “வெற்றியை”க் கொண்டாடினர்.
பஞ்சாபில் மட்டும் 1965-66இல் 33.89 லட்சம் டன்னாக இருந்த உணவு உற்பத்தி, 1985-86க்குள் 172.21 லட்சம் டன்னாக உயர்ந்தது. ஹரியானாவில் அதே சமயத்தில், 19.85 லட்சம் டன்னிலிருந்து, 81.47 லட்சம் டன்னாக உயர்ந்தது. பசுமைப் புரட்சியின் அனுகூலங்களை நன்றாக அனுபவித்த பெரிய விவசாயிகளின் உற்பத்தி சந்தைக்கு வந்தது!
பஞ்சாப் - ஹரியானாவில் நிகழ்ந்த கோதுமை உற்பத்தி அதிகரிப்புக்கு ‘பக்ரா நங்கல்’ அணை ஒரு முக்கியக் காரணமென்பதும் பரவலாக நம்பப்படும் ஒரு கருத்து. ஆனால் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால், பக்ரா நங்கல் அணை 1954ஆம் ஆண்டே செயற்பாட்டுக்கு வந்துவிட்டது. 1963-64ஆம் ஆண்டில், ஏற்கனவே (அதன் அதிகபட்சக் கொள்திறனான) 24.8 லட்சம் ஏக்கர் நிலத்துக்குப் பாசனம் அளித்துவந்தது. ஆனால் 1972வரை நாம் உணவு இறக்குமதி செய்துகொண்டுதான் இருந்தோம். பக்ராநங்கல் அணை, நீர்ப்பாசன வசதியை ஏற்கனவே அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு சில இடங்களிலிருந்து வேறு சில இடங்களுக்கு மாற்றிவிடுவதை மட்டுமே செய்தது என்றும், கோதுமைப் புரட்சி நிகழ முக்கியமாக, ஆழ்குழாய்க் கிணறுகளே காரணம் என்றும் ஆராய்ச்சிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கின்றன!
நெல்லில் “பசுமைப் புரட்சி”
சி. சுப்பிரமணியனின் சுயசரிதையில், அவருடைய திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த அந்த மூத்த விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான டாக்டர் ரிச்சாரியா அவர்கள். ஒருவேளை இரசாயன உரங்களையே உபயோகித்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்தால்கூட, நமது நாட்டு ரகங்களிலேயே குட்டையான, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட, குறுகியகால அறுவடை ரகங்களையே உபயோகிக்கலாம் என்று தன் ஆராய்ச்சியின் மூலம் காட்டினார். தலைசிறந்த நெல் விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவைக் கொண்டு தான் சேகரித்த 17,000 நாட்டு நெல் ரகங்களைக் கொண்டு, அற்புதமான ‘மேம்படுத்தப்பட்ட ரகங்களை’ அவர் உருவாக்கிக்கொண்டிருந்தார். நம் நாட்டில், ஏன் உலகிலேயே நெல் ஆராய்ச்சியில் இத்தனை முக்கியமான பங்கு வகித்த டாக்டர் ரிச்சாரியாவின் பெயர்கூட, சி. எஸ்ஸின் சுயசரிதையில் இடம்பெறவில்லை.
ஹெக்டேருக்கு 3.7 டன்னுக்கு மேல் விளைச்சலைக் கொடுக்கும் ரகங்களைத்தான் ‘உயர் விளைச்சல் ரகங்கள்’ (High Yielding Varieties / HYVs) என்று இந்திய அரசாங்கம் நிர்ணயம் செய்திருந்தது. ரிச்சாரியா சேகரித்த 17,000 ரகங்களில் 9சதவிகிதம் இத்தகைய விளைச்சலைக் கொடுத்தன; 8சதவிகிதம் குறுகிய கால அறுவடைப் பயிர்கள். 237 வாசனை ரகங்கள் இருந்தன. விவசாயிகளுக்கு அதிக விலை பெற்றுத் தரும் பல உயர்ந்த (superior) ரகங்களும் உயர் விளைச்சல் ரகங்களாக உருவாக்கப் பட்டிருந்தன. சில முக்கியமான ரகங்களின் பட்டியல் இதோ!
* பஸ்தரைச் சேர்ந்த Gadur Sela (Bd:810) எனும் ரகம், ஹெக்டேருக்கு 9.8 டன், TD2 (Bd:45) 6.1 டன், Balkoni (Bd:504) 5 டன், JS5 (Bd:49) 4.8 டன், CR 1014 (Mrignain) 4.8 டன், Pallavi (Bd:193) 4.2 டன் விளைச்சலைக் கொடுத்தன.
* Badal Phool (Bd:21), Dhour (Bd:23), (Bd:49) மற்றும் Ram Karouni (Bd:1353) ஆகியன குட்டை ரகங்கள்.
* Dokra Dekri எனும் ரகம், உலகிலேயே மிக நீளமான அரிசி ரகம்.
* (பால்)கோவா அரிசி உலர்ந்த பாலைப் போன்ற சுவையைக்கொண்டது.
இத்தனை அற்புதமான நெல் ரகங்கள் நம் நாட்டிலேயே இருக்கும்போது, உருவாகியிருக்கும்போது வெளிநாடுகளிலிருந்து, கோடிக்கணக்கில் பணம் செல வழித்து, பெரிய அளவில் சோதனை செய்து பார்க்காத அந்நிய ரகங்களை இறக்குமதி செய்வதற்கு அவசியமே இல்லை என்று ரிச்சாரியா கூறிக்கொண்டிருந்தார். (தாய்வான், ஜப்பான் போன்ற) அன்னிய நாடுகளிலிருந்து டன் கணக்கில் விதைகளை வாங்கி நம் நாட்டின் மண்ணில் விதைத்தால், அதுவரை நாம் கண்டறியாத பூச்சிகளையும் நோய்களையும் கூடவே கொண்டு வந்து விடும் விபரீதத்தில் முடியும் என்று எச்சரித்தார். ஆனால் ஒரு சில அன்னிய ரகங்களை மட்டும் உபயோகித்து, தீவிரமாகக் கண் காணித்து எச்சரிக்கையுடன், நீண்ட நாட்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு புதிய ரகங்களை உருவாக்குவதில் ரிச்சாரியாவுக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. அத்தகைய ஆராய்ச்சியில் அவரே ஈடுபட்டும் இருந்தார்.
‘சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம்’ (IRRI) 1960இல் பிலிப்பீன்ஸ், மனிலாவில் ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷனால் நிறுவப்பட்டது. இந்த ஐ. ஆர். ஆர். ஐயின் அமெரிக்க இயக்குநரான ராபர்ட் சாண்ட்லர் அவர் தனது சுயசரிதையில் “அப்போது நான் ஒரு நெல் செடியை நேரில் கண்டதுகூட இல்லை!” என்று ஒப்புக்கொண்டுள்ளார். ‘நெல் பயிர் செய்வதில் அனுபவமே இல்லாத, நெல் ரகங்களின் germplasm ஒன்றும் கையில் இல்லாத நாடான அமெரிக்காவுக்கு, ஐ. ஆர். ஆர். ஐ. நிறுவுவதில் அப்படி என்ன அக்கறை?’ என்கிற கேள்விக்கான விடையை (ஆசிய அரசியல்-பொருளா தாரத்தைத் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனும் நோக்கம்) முன்பே ஆழமாகப் பார்த்துவிட்டுத்தான் இந்தக் கட்டுரைக்கு வந்திருக்கிறோம் என்பதை நினைவுகூரவும். ராக்க ஃபெல்லர் ஃபவுண்டேஷன் முதலில் இந்திய அரசாங்கத்தை அணுகி, தரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தைத் (CRRI) தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டது. அப்போது சி. ஆர். ஆர். ஐயின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்த டாக்டர் ரிச்சாரியா “நெல் ஆராய்ச்சியைத் தனியார் நிறுவனத்தின் கட்டுப் பாட்டுக்குக் கொடுப்பது, விஞ்ஞானிகளின் சுதந்திரத்தை இழப்பதற்கு வழிவகுக்கும். ஆகையால், இந்த அமைப்பு ஒரு சுதந்திர ஆராய்ச்சி மையமாகவே செயல்பட வேண்டும்!” என்று அரசாங்கத்திடம் தன் கருத்தைத் தெரிவித்தார். அப்போதிருந்த அரசாங்கம், ரிச்சாரியாவின் வார்த்தைக்கு மரியாதை அளித்து, ராக்கஃபெல்லர்களுக்குக் கைவிரித்துவிட்டது. அதற்குப் பிறகுதான் மனிலாவில் அதன் தொடக்கம்.
ஐ. ஆர். ஆர். ஐச் சந்தைப்படுத்திய ஐ. ஆர்-8 நெல் ரகம் டன் கணக்கில் இந்தியாவிற்குக் கப்பலில் வந்துகொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட ரிச்சாரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நேர்ந்த சந்திப்பொன்றில் சி. எஸ். “அதெல்லாம் எனக்குத் தெரியாது! ராக்கஃபெல்லர் நிறுவனத்தினர் நமக்கு அனுப்பிவிட்டார்கள்; அதை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்!” என்று சர்வசாதாரணமாகக் கூறிவிட்டார். இதற்குப் பிறகும் தனது முடிவை மாற்றிக்கொள்ளாத, தங்கள் வளர்ச்சிப் பாதையில் குறுக்கே நிற்கும் ரிச்சாரியாவைப் பணியிலிருந்து நீக்கினால்தான் இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதாக சாண்ட்லர் சி. எஸ்ஸை நிர்ப்பந்தித்தார். அவருடைய நிர்ப்பந்தத்துக்கு இணங்க பணி இறக்கம் செய்யப்பட்டார் ரிச்சாரியா. அடுத்த மூன்றாண்டுகள் ஒரிஸ்ஸா உயர் நீதிமன்றத்தில் போராடியதன் விளைவாக, அவர் குடும்பத்தில் நிம்மதி குலைந்தது; குழந்தைகளின் கல்வியும் மனைவியின் உடல் நலமும் கெட்டன. முடிவில் 1970இல் நீதிமன்றம் ரிச்சாரியாவுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து, சிஸிஸிமியில் மறுபடியும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவளித்தது. ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டார் ரிச்சாரியா. பின்னர் மத்தியப் பிரதேச அரசாங்கம் நெல் ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவுமாறு அவரைக் கேட்டுக்கொண்டது. மனம் தளராத ரிச்சாரியா ராய்பூரில் பிரம்மிப்பூட்டும் ‘மத்தியப் பிரதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தை’ ஆறே ஆண்டுகளில் உருவாக்கினார். இவருடைய உதவியாளர்கள் இரண்டு வேளாண் பட்டதாரிகளும், ஆறு கிராமப் பணியாளர்களும் மட்டுமே! இந்நிலையத்தின் ஓராண்டு பட்ஜெட் ரூ. 20,000 மட்டுமே!
ஐ. ஆர். ஆர். ஐயிடம் நெல் ஆராய்ச்சியில் அனுபவமோ தரமான நெல் ரகங்களின் மூலப்பொருளோ (germplasm) இல்லாத காரணத்தால் வரிச் சலுகையையும் டாலர் சம்பளத்தையும் வேறு பல பலன்களையும் காட்டித் திறமை வாய்ந்த விஞ்ஞானிகளைக் கவர்ந்திழுத்தது; பணத்தைக்கொண்டு மூலப்பொருள்களை வாங்க முயன்றது. இப்படித்தான், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளைத் தன் கீழ் கொண்ட பதவியிலிருந்து, 200 விஞ்ஞானிகளை மட்டும் கொண்ட ஐ. ஆர். ஆர். ஐயில் இயக்குநராகச் சேர்ந்தார் எம்.எஸ். சுவாமிநாதன். உண்மையில் இது ஒரு ‘பணி இறக்கம்’ என்றே பலராலும் கருதப்படுகின்றது.
இதற்கிடையே, ரிச்சாரியா எச்சரித்ததுபோலவே ஐ. ஆர்.-8, ஐ. ஆர்.20, ஐ. ஆர்.-26 என்று ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவில் இறக்குமதியாகிய ஐ. ஆர். நெல் ரகங்கள் எல்லாம் பூச்சி, நோய் தாக்கி நாடெங்கிலும் பெருத்த (30-100%) சேதங்களைச் சந்தித்தன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்பட்ட ஐ. ஆர். ஆர். ஐ., இந்தியாவில் ரிச்சாரியா சேகரித்து வைத்திருந்த ரகங்களின் - “ஒன்றுக்கும் உதவாத இந்திய நெல் ரகங்கள்” என்று சமீபகாலம்வரை அது கேவலமாகப் பேசிய அதே ரகங்களின் - பூச்சி எதிர்ப்புத் தன்மையைத் தேடி இங்கே வந்தது. இந்தத் தேடுதலுக்காக இங்கே வந்த அமெரிக்கர்கள், அப்போது ஐ. சி. ஏ. ஆரில் பெரிய பதவியிலிருந்த எம். எஸ். சுவாமிநாதனின் உதவி கொண்டு இந்தியாவில் (சி. ஆர். ஆர். ஐ. உள்பட) பல இடங்களிலிருந்தும் நெல் ரகங்களைச் சேகரித்தார்கள். பிறகு ரிச்சாரியாவிடம் வந்து அவர் மத்தியப் பிரதேசத்தில் சேகரித்து வைத்திருந்த தரமான விதைகளைக் கொடுக்குமாறு கேட்டனர். அதற்குப் பதிலாக அவர்கள் தர முன்வந்த ரகங்கள் அனைத்தும் பூச்சி மற்றும் நோயால் எளிதில் பாதிப்படையும் தன்மை கொண்டவை. பல்வேறு காரணங்களுக்காகத் தான் சேகரித்த விதைகளைத் தற்காலிகமாகத் தர மறுத்த ரிச்சாரியாவை ஒன்றுமில்லாமல் செய்யும் நோக்கத்தோடு, அவர் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்த மத்தியப் பிரதேச நெல் ஆராய்ச்சி அமைப்பை ஒரேயடியாக மூடவைத்துவிட்டது ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன். அதோடு மட்டுமல்லாமல், அவருடைய அறையிலிருந்த ஆராய்ச்சிப் பொருள்கள், அறிவியல்ரீதியான தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றிக்கொண்டது. இந்திய அதிகார வர்க்கத்தில் இந்த ஃபவுண்டேஷனுக்கு இருந்த செல்வாக்கு அப்படிப்பட்டது.
இவ்வாறாக இந்திய நெல் ஆராய்ச்சி நிலையங்களில் நடந்து கொண்டிருந்த உயர்ந்த ஆராய்ச்சிகள் முடக்கப்பட்டன; நிறுத்தப்பட்டன. முழுக்க முழுக்க ஐ. ஆர். ஆர். ஐ. அறிமுகப்படுத்திய நெல் ரகங்களைக் கொண்டே ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படத் தொடங்கின. கோதுமையைப் போலவே, அதிக அளவுகளில் இடுபொருட்களைக் கொண்டு ஐ. ஆர். ரகங்களின் விளைச்சலும் அதிகரிக்கப்பட்டுச் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டது.
வேளாண் ஆராய்ச்சியில் பொய்கள், ஊழல்கள், மோசடிகள்
சிகப்பு நிற சொனோரா-64 ரகத்தை ஒருவிதக் கதிரியக்கத்துக்கு உட்படுத்தி ஷர்பதி சொனோரா என்கிற புதிய ரகத்தை உருவாக்க முன்வந்தார் எம். எஸ். சுவாமிநாதன். இந்த புதிய ரகத்தில் லைசின் எனும் முக்கியமான அமைனோ அமிலத்தின் சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்த அற்புதமான கண்டுபிடிப்புக்காக மாக்சசே விருதையும் பெற்றார். ஆனால் பிறகு போர்லாக் பணிபுரிந்த சி. ஐ. எம். எம். ஒய். டி. நிறுவனமே சொனோராவிற்கும் ஷர்பதி சொனோராவிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்தது. இது தனது ஆய்வுக்கூட உதவியாளர் செய்த தவறு என்று கூறிச் சமாளிக்க முனைந்தார் எம். எஸ். எஸ்.
மேலும், பசுமைப் புரட்சியை வெளியிட்ட ஐ. ஏ. ஆர். ஐயில் ‘உயர் விளைச்சல் ரகம்’ என்று கூறி ‘பைசாகி மூங்க்’ என்னும் ஒரு ரகப் பருப்பு வகையை வெளியிட்டது. அது அமோக விளைச்சலைத் தரும் என்று சொல்லப்பட்டது. ஆனால் பயிரிட்ட எங்குமே சொல்லப்பட்ட விளைச்சலில் பாதியைக்கூடத் தாண்டவில்லை! மற்றொரு மக்காச்சோள ரகம், பாலில் உள்ள அளவுக்குச் சத்து நிறைந்தது என்று அறிவிக்கப்பட்டது. அதுவும் ஒரு பொய்யென்று நிரூபணம் ஆனது.
அதே சமயம், மிகுந்த சர்ச்சைக்குரிய வேறொரு செய்தி வெளிவந்தது. அது, மே 1972இல் டாக்டர் வினோத் ஷா என்னும் வேளாண் விஞ்ஞானி தற்கொலை செய்துகொண்ட செய்தி. மனம் உடைந்துபோன, அவமானத்துக்குள்ளாகிய சில வேளாண் விஞ்ஞானிகளின் தற்கொலைச் செய்திகள் ஏற்கனவே வெளி வந்திருந்தாலும், டாக்டர் ஷாவின் தற்கொலை ஒரு பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதற்குக் காரணம், அவர் ஒரு வாலிபர் என்பதும், அவர் தற்கொலைக்கு முன்பு எம். எஸ். சுவாமிநாதனுக்கு எனக் குறிப்பிட்டு ஒரு கடிதத்தை எழுதிவிட்டுச் சென்றதுமாகும். “உங்கள் சிந்தனா முறைக்குப் பொருந்துகிற விதத்தில் விஞ்ஞானத்துக்குப் புறம்பான பல புள்ளிவிவரங்கள் திரட்டப்படுகின்றன . . . சொந்தமான கருத்துகளும் ஆக்கபூர்வமான, அறிவியல்ரீதியான விமர்சனம் கொண்டவர்கள் பலியிடப்படுகிறார்கள்” என்று அதில் அவர் எழுதியிருந்தார். நாடாளுமன்றத்தில் டாக்டர் ஷாவின் தற்கொலை பெரிய புயலைக் கிளப்பிவிட, அரசாங்கம் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான டாக்டர் பி. பி. கஜேந்திர கட்கர் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. விசாரணையின் முடிவில், அது எம். எஸ்ஸுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது. “ஐ. ஏ. ஆர். ஐயின் (Indian Agricultural Research Institute / IARI) இளநிலை விஞ்ஞானிகள் பலர் தங்கள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை வெளியிடத் தங்களுக்குச் சுதந்திரம் இல்லை என்று - சரியாகவோ தவறாகவோ - கருதுகிறார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒத்துவராத காரணத்தாலோ அல்லது அறிவியல் ஆதாரமற்ற புள்ளிவிவரத்தை மேலிடத்திற்குத் தருவதற்குப் பதிலீடாக ஏதேனும் நன்மைகளும் பதவி உயர்வுகளும் வழங்கப்படுவதாலோ தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட முடியாத நிலை இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்” என்று அந்தக் குழு எச்சரித்தது.
1974இல், த நியூ சயன்டிஸ்ட் என்னும் புகழ்பெற்ற விஞ்ஞானப் பத்திரிகை, எம். எஸ்ஸின் லைசின் பொய்யை அம்பலப்படுத்தியது. எம். எஸ்ஸைக் கேள்வி கேட்ட டாக்டர் ஒய். பி. குப்தாவின் மாணவர்கள் அனைவரும் அவரிடமிருந்து காரணமே இல்லாமல் பிரிக்கப்பட்டனர்; அவருக்குப் பதவி உயர்வு மறுக்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் குப்தா “நியாயமற்ற விதத்தில் நடத்தப்பட்டார்” என்றும், அவருடைய மேலதிகாரி நெறியற்ற முறையில் நடந்துகொண்டார் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுவாமிநாதன் தலைமை வகித்த நிறுவனத்தின் கல்விப்புலக் குழுவை (academic council) “தடித்தனம் கொண்ட, இதயமற்ற, அதிர்ச்சிகரமான” என்றெல்லாம் விமர்சித்தது.
“அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வீரிய விதைகள் நீங்கள் சொல்வது போலவே நம்முடைய பாரம்பரிய விதைகளைவிடத் தாழ்வானதாகவே இருந்திருந்தால், எப்படி விவசாயிகளால் ஏற்கப்பட்டு கோடிக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டன? நம் விவசாயி என்ன அத்தனை முட்டாளா?” என்ற கேள்வி எழலாம். உலக வங்கியும் யு. எஸ். எய்ட் அமைப்பும் புதிய விதைகளை (அதோடு மற்ற இடுபொருட்களையும்) விவசாயிகள் மத்தியில் பரப்புவதற்காக, ஃபோர்டு மற்றும் ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன்களுடன் கைகோத்துக்கொண்டு நிறைய கடனை வாரி வழங்கின. ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன் மற்றும் யு. எஸ். எய்டின் உதவியுடன் 1963இல் தேசிய விதைக் கழகம் (National Seed Corporation) நிறுவப்பட்டது. உலக வங்கியின் 13 மில்லியன் டாலர் உதவிகொண்டு 1969இல் டெராய் விதைக் கழகம் (Terai Seed Corporation) நிறுவப்பட்டது. 1971இல் உலக வங்கியின் தலைவர் ராபர்ட் மெக்நமாரா, விவசாய ஆராய்ச்சிக்கான சர்வதேச ஆலோசனைக் குழு (Consultative Group on International Agricultural Research- CGIAR) என்னும் அமைப்பை நிறுவினார். இதன் முக்கியப் பணி, உலகெங்கும் வளர்ந்துவரும் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பது. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் (1966-71) வேளாண்மைக்கான அன்னியச் செலாவணி 1,114 கோடியாக வளர்ந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டில் வேளாண்மைக்காக ஒதுக்கப்பட்ட முழு நிதியைவிட ஆறு மடங்கு அதிகம்.
புதிய விதைகளைப் பரப்புவதற்காக 1976இல் தேசிய விதைத் திட்டம் (National Seed Project) I-இன் மூலம் 25 மில்லியன் டாலரையும், 1978இல் திட்டம் II-இன் மூலம் 16 மில்லியன் டாலரையும் உலக வங்கி கொடுத்தது. இவை போதாதென்று 1990-91இல் இதே திட்டத்தின் மூன்றாம் நிலையில் 150 மில்லியன் டாலர் கடன் அளிக்கப்பட்டது. “விதைகளுக்கான தொடர்ச்சியான கிராக்கி எதிர்பார்த்த அளவு விரிவடையாததால் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்தத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. தன் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் பயிர்கள் விஷயத்தில், குறிப்பாக, நெல், கோதுமை போன்றவற்றில், விவசாயிகள் தங்களிடமே தக்க வைத்துக்கொள்ளும் விதைகள், விவசாயிகளுக்குள் பண்டமாற்று செய்துகொள்ளும் விதைகள் ஆகியவையே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. அதிக விளைச்சல் ரகங்களில் சில, மரபு சார்ந்த ரகங்களைக் காட்டிலும் வீரியம் குறைந்தவையாக இருந்ததால் விவசாயிகளிடத்தில் அவை அதிக வரவேற்புப் பெறவில்லை” என்று தேசிய விதைத் திட்டம்-3இன் ஆவணமே அழகாக விளக்கியுள்ளது.யாருடைய உதவியுமில்லாமல், தாங்களாகவே உருவாக்கிய நல்ல தரமான விதைகளை விவசாயிகள் கைமாற்றம் செய்துகொள்கிறார்கள் என்பது விவசாயியின்மீது உண்மையான அக்கறையுள்ள யாவருக்கும் ஒரு நல்ல சேதிதானே! ஆனால் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உதவப் போகிறோம் என்று பச்சைப் போர்வை போர்த்திக்கொண்டு இறங்கிய “பசுமைப் புரட்சி”யாளர்களுக்கு இதைவிட மோசமான சேதி இருக்க முடியாது! ஏனெனில் அவர்களுக்கு உண்மையில் தேவையாக இருந்த பண லாபம், ‘விதைக் கைமாற்றத்தால்’ எப்படி ஏற்படும்? அவர்களால் உருவாக்கப்பட்டு, அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மலட்டு விதைகளை விவசாயிகள் அதிகப் பணம் கொடுத்து வாங்கினால்தானே இது சாத்தியமாகும்! இத்தனை வேலைகளையும் திட்டமிட்டு, விவசாயிகளை மூளைச்சலவை செய்து, மாபெரும் விதைச் சந்தையை உருவாக்குவதற்காகத்தான் இந்த 150 மில்லியன் டாலர் கடனுதவி!
இத்தனை வன்முறைக்குப் பிறகும், அவையெல்லாம் அம்பலப்படுத்தப்பட்ட பிறகும் பசுமைப் புரட்சியின் “வெற்றிக்கொடி” பாமர மக்கள் மத்தியில் மேலோங்கிப் பறந்தது! 50 ஆண்டுகள் ஆகியும், “பசுமைப் புரட்சி”யின் பொய்யான சாகசக் கதைகள் எல்லாப் பக்கமும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவுகள் என்ன? நம் விவசாயத்தை மீட்க என்ன வழி?
நன்றி  -சங்கீதா ஸ்ரீராம்

சுற்றுச் சுழலை மிக அதிக அளவில் மாசுபாடுத்தும் ஆனால் தவிர்க்க முடியாத பொருள்.


எண்ணை (டீசல்) இதனால் ஏற்பட்ட சுற்றுசுழல் மாசுபாடும், உயரினங்களின் அழிவும், நாட்டிற்கு நாடு போட்டி, சண்டை, கொலை பின்பு சுரண்டல் என கணக்கிட்டால் இந்த கண்டு பிடிப்பு உலக சமாதானத்தை, உயிரின அழிவை மிக அதிகமாகவே பாதித்துள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. ஒவ்வொரு நாட்டிலும் எண்ணை கண்டுபிடித்து அதிகார வர்கத்திற்கு லஞ்சம் தந்து உள்ளூர்வாசிகளை வதைத்து எண்ணை எடுத்து அதை கடலில் கொட்டி நாசம் செய்து பின் சேருகின்ற இடத்திலும் புகையை விட்டு வளி மண்டலத்தை நாசம் செய்த கண்டுபிடிப்பு இது. ஆனால் டீசல் எஞ்சினை கண்டுபிடித்த திரு. ரூடால்ப் டீசலின் முதல் எஞ்சின் தாவர எண்ணை கொண்டுதான் ஓட்டப்பட்டது. (நூறு ஆண்டுகளுக்கு முன்பே )எஞ்சினை தாவர எண்ணைக்கு சிறப்பாக மாற்றாமல் தடம் மாறி எரிபொருள் “கச்சா எண்ணை” என்று ஆனபோது மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளும் நடந்து இன்று அழிவின் எல்லைக்கு வந்தவுடன் “ஞானம் பிறந்து” மறுபடியும் “பயோ-டீசல்” என பெருமளவு தொகையுடன் ஆராய்ச்சிகள். அதிலும் நம் நாட்டில் நன்கு விளையும் புன்னை, புங்கன் போன்ற வறட்சியை தாங்கி வளரும், நோய் சற்று குறைவான சுற்று சுழலை மேம்படுத்தும் தாவர வகைகளை விடுத்து ஜெட்ரோபாவில் அதிக கவனம் ஓரு நெருடல்தான். உணவு பொருட்களையும் “பயோடீசலாக” மாற்ற நினைப்பது ஏழை மற்றும் வளரும் நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சென்ற மாதம் ஏற்பட்ட மெக்ஸிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவை பார்த்தோம். இதே போன்ற மிக மோசமான எண்ணை விபத்து "எக்ஸான் வால்டெஸ்" எண்ணை விபத்து ஆகும். கடற்பகுதியில் மனிதானால் ஏற்படுத்தப்பட்ட மிக மோசமான விபத்து ஆகும்.

1989 ஆண்டு மார்சு மாதம் 24 ஆம் தேதி அலெஸ்காவின் “பிரின்ஸ் வில்லியம் சௌண்ட்” பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்து லட்சக் கணக்கான பறவைகளையும், கோடிக் கணக்கான மீன்களையும் அழித்து நிறைய மீன்பிடி, சுற்றுலா நிறுவனங்களை திவாலாக்கியது. மக்களின் உணவு மற்றும் வாழ்வாதாரங்களை பாழடித்தது. 5 பில்லியன் நஷ்ட ஈடு கேட்கப்பட்டு பின் மிக குறைவான தொகைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சுற்றுசுழல் மாசுபாடு இன்று வரை தொடர்கிறது.

இந்த சுற்றுச்சுழல் தினத்தன்று சில வரையறைகளை, இலக்குகளை நமக்கு நாமே விதித்து செயல்படுத்தலாம்.


சிறிது தூர பயணத்திற்கு சைக்கிள் உபயோகப்படுத்துவது. ( உடற்பயிற்சியும் கூட)அருகிலுள்ள ஊர்களுக்கு பேருந்தை உபயோகிப்பது.
தூரத்திலுள்ள ஊர்களுக்கு இரெயில் பயணம்.குழந்தைகளை முடிந்த அளவிற்கு பள்ளிப் பேருந்தில் அனுப்புவது.

நாமும் நிறுவன வாகனங்கள் இருந்தால் அதனை உபயோகிப்பது.
நமது வழக்கமான பாதை நெருக்கடி மிகுந்ததாக இருந்தால் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது அல்லது மாற்றுப் பாதையை உபயோகிப்பது.
அருகிலுள்ளவர்களையும் இணைத்து ஓரே ஊர்தியை முடிந்த அளவிற்கு உபயோகிப்பது.மின்சார வாகனங்களுக்கு மாறுவது ( வேகம் வசதி குறைவுதான் )
மின்தடையின் போது ஜெனரேட்டர்களுக்கு பதில் சூரிய விளக்கு (Solar light) அல்லது காற்றாலைகளை உபயோகிப்பது.
எண்ணை வித்து மரங்களை நடுவோம்.
மாற்று எரிபொருளை ஆராய்வோம்ஈயம்[lead] கலக்காத எரி பொருளை பயன்படுத்தலாம்.
வாகன புகையளவை கட்டுக்குள் வைக்கலாம்.

மாணவர்களின் விண்ணப்பமும்........ தப்பிய மரமும்..



சாலை விரிவாக்கம் முடிந்த நிலையில் மரத்தை சுற்றி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. முயற்சி எடுத்த குழந்தைகளை காணவும் அவர்களது மனநிலையை அறியவும் அவர்களை சென்று பார்த்தேன். பெரிய மழலை பட்டாளமே அங்கு இருந்தார்கள். மரத்தை காப்பாற்றிய பெருமிதம் அவர்கள் முகத்தில் இருந்தது. குழந்தைகளின் பெற்றொர், ஆட்டோ ஓட்டுனர்கள், கடை உரிமையாளர்கள் என அனைவரும் அதில் பெருமிதம் கொள்வதோடு மேலும் மரங்களை வளர்க்கவும், பாதுகாக்கவும் ஆவலாய் இருப்பது எனக்கு மேலும் உற்சாகம் தந்தது. இந்த சமூக அக்கறைதான் நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை. இக்குழந்தைகளின் மனதில் இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்ற விதையை இங்குள்ள பெரியவர்கள் விதைத்திருக்கிறார்கள் அது மிக பெரிய விருட்சமாக வளர எல்லா வரங்களையும் பெற்று மேலும் சேவை செய்ய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.. இதுபோன்று பல கோடி குழந்தைகள், மக்கள் இந்த உலகத்திற்கு தேவை.

ஒரு பழைய பாடல் ஞாபகம் வருகிறது.

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.... நோ பீஸ் ஆப் மைன்ட். ( No peace of Mind )
ஆயிரம் இல்லாவிட்டாலும் வசதிகள் இல்லாவிட்டாலும் இயற்கையோடு இருந்தால் எல்லாம் உண்டு.


மாணவர்களின் விண்ணப்பமும், வெட்டுக்கு தப்பிய 55 வருட மரமும்.

வெட்டப்படவிருந்த 55 வருட அரச மரம்.

கோவை அவினாசி பிரதான சாலையிலிருந்து 200 மீ தூரத்தில் மசாக்காளி பாளையம் செல்லும் சாலையில் 55 வருட பெரிய அரசமரம் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்தது. இதனை கேள்விப்பட்ட மாணவர் திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும் குறை தீர்க்கும் நாளன்று (29-03-2010 ) மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அம்மரத்தை வெட்ட வேண்டாம் என விண்ணப்பம் செய்தனர். அவர்களின் வேண்டுகோள் ஏற்கபட்டு இன்று வரை மரம் வெட்டப்படவில்லை. “சலசல”வென்ற சத்ததுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
அரச இலைகள்.

விஞ்ஞானப் பெயர் : Ficus Religiosa
புனிதமான மரம்.
மரங்களின் அரசன்.
புத்தருக்கு ஞானம் கிடைத்தது இந்த மரத்தடியில்தான் என்பது வரலாறு.
கோவை மாநகரின் கற்பக விருட்சம்,

மாணவர் திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும்; குழந்தைகள் தானே என்று இல்லாமல் இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவர்களது குறிகோளை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரும் போற்றுதலுக்கு உரியவர்கள்.
தந்தை திரு. ப. தண்டபாணியுடன் மாணவர் திரு. த. அருண்குமார்

பணம் மட்டுமே குறிகோளாகக் கொண்டு பெரிய வனங்களையே சூறையாடும் கும்பல்களிடையே திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும் தக்க சமயத்தில் இறங்கி இந்த இளம் வயதில் விடிவெள்ளி நட்சத்திரங்களாக இயற்கையை பாதுகாக்க இருப்பது மனதிற்கு ஆறுதல் தருகிறது.
மாணவர் திரு. அருண்குமாரின் கடித்ததின் நகலை இங்கே தருகிறேன்.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம் ஐயா, எங்கள் பகுதியில் உள்ள 55 ஆண்டுகளாக உள்ள அரசமரத்தை வெட்டக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.

நான் உங்களுக்கு நிழல் தருகிறேன், சுவாசக் காற்று தருகிறேன் பிறகு ஏன் என்னை அழிக்க நினைக்கிறீர்கள். என்னை அழித்துவிட்டு வெயிலில் வாடி அழிந்துவிடாதீர்கள். என்னை அழித்து விட்டால் என் மேல் கூடுகட்டி வாழும் பறவைகளுக்கு என்ன பதில் சொல்வேன். நான் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்து உங்களுக்கு நான் சுத்தமான காற்றை தருகிறேன். ஆகையால் என்னை அழிக்காமல் காத்திடவும்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள குழந்தைகள்,
த. அருண்குமார்.


சுற்றுச் சுழலை காப்பது யார் ????

அண்மையில் தமிழகத்தின் முக்கியமான ஒருவருக்கு அளிக்கப்பட்ட ஓவியத்தின் பிரதி இது. ஓவியர் ஒரு பொறியாளர். இந்த ஓவியம் பற்றிய கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

பாலைவனமாகும் தேரிக்காடும் ......... மறந்த திருக்குறளும்


30,000 பேருக்கு வேலை வழங்கும் நிலத்தை எடுத்துக் கொண்டு 2,000 பேருக்கு வேலை தரும் டாடாவின் பெருந்தன்மையைத் தேரிக்காட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இந்தப் பெருந்தன்மையால் எரிச்சலடைந்துள்ளனர். அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது. இந்தச் சிவந்த மண் பூமியை நம்பித்தான் இங்கே உள்ள முழு மக்கள்தொகையும் வாழ்ந்துவருகிறது.

டாடா நிறுவனத்தினர் 15,000 ஏக்கர் நிலத்தை வாங்கப்போகிறார்கள். அவர்கள் வாங்கப்போகும் நிலத்தில் வீடுகள், சாலைகள், கல்லறைகள், மாதா கோவில்கள், மசூதிகள், கோவில்கள், பள்ளிகள், விவசாய நிலம் என்று அனைத்தும் அடக்கம். டாடா நிறுவனத்தினர் இந்த நிலத்தின் மேலிருக்கும் அனைத்தையும் அகற்றிவிட்டுத் தோண்டி எடுக்கப்போகிறார்கள். 30 ஆண்டுகள் கழித்து என்ன மிச்சமிருக்கும்?


இந்தப் பூமி வளமான விவசாய பூமி. முருங்கை, கொய்யா, மா, முந்திரி போன்ற பணப்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ள பூமி. நிலமற்ற மக்கள் விவசாய வேலைகளில் கிடைக்கும் கூலியில்தான் வாழ்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, வானுயர வளர்ந்துள்ள பனை மரக்காடுகள் செழித்துள்ள பூமி. பனை மரத்தைக் கர்ப்பக விருட்சம் என்றும் சொல்வார்கள். அதன் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு வாழ்வளிக்கும். இந்த மரங்களை நம்பி இங்கே நாடார் சமூகம் வாழ்ந்துவருகிறது. அவர்கள் மிக மோசமான வாழ்க்கை நடத்துகின்றனர். மரம் ஏறுதல், பதநீர் இறக்குதல், கருப்பட்டி, பனை ஓலை-மட்டைகளைப் பதப்படுத்துதல், கூடை அல்லது பாய் முடைதல் என்று இவர்களின் குடும்பமும் வாழ்க்கையும் பனையைச் சுற்றியே இருக்கிறது. டாடாவின் சுரங்கத் தொழிலில் இவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? அதற்கான சிறப்புத் தகுதிகள் என்ன இருக்கிறது இவர்களிடம்? இவர்கள் வாழ்க்கை என்னவாகும்?


தேரிக்காடு: நீர்வனமா? பாலைவனமா?

கருணாநிதி தேரிக்காடுகளைப் பாலைவனம், பயனற்ற பொட்டல் காடு என்கிறார். எப்படியாவது டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிலகத்தை நிறுவிவிட வேண்டும் என்ற அவசரத்தில் அவர் பேசுகிறார். ஆனால், தேரிகள் அதாவது மணற்குன்றுகள் மழை நீரைத் தேக்கிவைக்கும் இயற்கை அணைகள். பெய்யும் மழையைச் சேகரித்து அவை ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுகின்றன. தேரிகள் இல்லை என்றால் நீரில்லை. நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர் கூற்றைத் தமிழறிஞர் கலைஞர் மறந்திருக்க வாய்ப்பில்லை. மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தேரிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் தமிழக அரசு பல கோடிகள் செலவழித்து முந்திரிக்காடுகளை வளர்த்துக் காற்றால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்துத் தேரிகளைக் காப்பாற்றும் வேலையைச் செய்து வந்திருக்கிறது. தஞ்சபுரம் கிணறு 40 அடியில் நல்ல நீரைக் கொண்டுள்ளது. குட்டம் என்னும் கிராமத்தின் 1,500 குடும்பங்களுக்குத் தேவையான நீரை ஆண்டு முழுவதும் தந்துகொண்டிருக்கிறது.


டாடாவால் கொள்முதல் செய்யப்படும் நிலங்களில் 50 அடிகள்வரை ஆழங்கொண்ட மணற்குன்றுகள் இருக்கின்றன என்று உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள். ஆற்று மணலையே அடியாழம்வரை தோண்டிப் பாறாங்கற்களைக் கண்டுபிடிக்கும் மணற்கொள்ளையரைத் தமிழகம் பார்த்திருக்கிறது. டாடா 50 அடிவரை தோண்டினார் என்றால் தேரிக்காடு, நீர்வனம் என்ற இன்றைய நிலையிலிருந்து உண்மையிலேயே பாலை வனம் ஆகிவிடும்.

டாடாவின் திட்டந்தான் என்ன?

டைட்டானியம் அடங்கிய இல்லுமினேட் என்னும் தாதுப்பொருளை ஆண்டுக்கு 5,00,000 டன் தோண்டி எடுத்து, 1,00,000 டன் டைட்டானியம் டை ஆக்சைடு தயார் செய்வதுதான் டாடாவின் திட்டம். 2,500 கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்படும் இத் திட்டம் 15,000 ஏக்கர் பரப்பைத் தோண்டும். இது ஏறக்குறைய 60 ச.கி.மீ பரப்பாகும். மதுரை நகரின் பரப்பைவிடப் பெரியதாகும்.
இந்த மாபெரும் திட்டத்தின் விவரம் எதனையும் தமிழக அரசு இதுவரை தரவில்லை. டாடாவும் வழக்கம்போல அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்கம் என்ன என்பது பற்றியோ உற்பத்தி நடக்கும் முறை பற்றியோ எந்த முறையான தகவலும் கிடைக்கவில்லை. என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை.


டைட்டானியம் என்றால் என்ன?
டைட்டானியம் வலுமிக்க உலோகம் ஆகும். ஆனால், அதன் எடை மிகவும் குறைவு. டைட்டானியம் அடங்கிய மூலப்பொருள்கள் புவிப்பரப்பில் பெருமளவு இருக்கின்றன. ஆனால், வணிக ரீதியாக எடுக்கப்படக்கூடிய மூலப்பொருள்கள் ருட்டைல் (Rutile) என்னும் வடிவிலும் இல்லுமினேட் (Ilmenite) என்னும் வடிவிலும் கிடைக்கின்றன. ருட்டைல் வடிவத்தில் கிடைக்கும் டைட்டானிம் டை ஆக்சைடு மிகவும் சுத்தமானது. ஆனால், அது அரிதாகத்தான் கிடைக்கிறது.

டைட்டானியத்திற்கும் அதன் டை ஆக்சைடுக்கும் பெரிய அளவான சந்தை காத்திருக்கிறது. அதன் வலு மற்றும் குறைவான எடை, அதுமட்டுமல்லாமல் அரிப்பை எதிர்க்கும் தன்மையின் காரணமாக இராணுவ ஆயுதத் தொழிலிலும் விண்வெளித் தொழிலிலும் வானூர்தித் தொழிலிலும் தொழிலகக் கட்டுமானங்களிலும் அது பெருமளவு பயனாகிறது. டைட்டானியம் டை ஆக்சைடு மின்னலடிக்கும் வெண்மை நிறம்கொண்டது. இதனால் வண்ணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இதனைப் பெருமளவு பயன்படுத்துகின்றன. இது விஷத்தன்மை அற்றதுங்கூட. அதனால், மாவு, தூய வெண்மையான உயர்தரச் சர்க்கரை, இனிப்புகள், பற்பசை, அழகு சாதனப் பொருள்கள் போன்றவற்றில் வெண்மை வண்ணம் ஊட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.


சொல்லப்படாத செய்திகள்
டாடா எந்த உற்பத்தி முறையைப் பயன்படுத்தப்போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், உலகெங்கும் உள்ள டைட்டானியம் உற்பத்திமுறைகளைப் பார்க்கும்போது, டாடா என்ன செய்வார் என்று ஊகிக்கமுடிகிறது. கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, இல்லுமினேட்டில் இருந்து டைட்டானியம் டை ஆக்சைடு தயார்செய்து அதனை உள்ளூர் மற்றும் அயல்நாட்டுச் சந்தைக்கு டாடா அனுப்பப்போகிறார் எனத் தெரிகிறது.


இல்லுமினேட் அடங்கிய கடற்கரை மணலை அள்ளியெடுத்து வேதியியல் முறையின் மூலம் மிக உயர்ந்த சுத்தமுள்ள டைட்டானியம் டை ஆக்சைடைப் பிரித்தெடுப்பதுதான் டாடாவின் திட்டம். இதன் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிட வேண்டுமென்றால் தோண்டியெடுக்கும் முறை பற்றியும் உள்ளூர் உயிர்ச் சூழல் மற்றும் புவியியல் தன்மைகளையும் ஆழமாகப் படிக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டைப் பற்றியும் போதுமான தகவல்கள் இல்லை. இருந்தபோதும் டைட்டானியம் டை ஆக்சைடு தொழில் பொதுவாக எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்ற விவரங்களை வைத்துக்கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

தோரியம் என்ற பூதம் என்னவாகும்?

இந்தத் தாதுப்பொருளை எடுக்கும்போது தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமமும் கிடைக்கும். அணுசக்தி தொடர்பான துறைகளில் தனியார் நுழைவது பற்றிய அதிருப்திக் குரல்கள் ஆங்காங்கே கேட்கத் தொடங்கியுள்ளன. டாடாவின் வரலாற்றையும் அணுசக்தித் துறையில் அவர்கள் காட்டும் ஆர்வத்தையும் கவனிக்கும் எவரும் கவலைகொள்வார்கள். தோரியம் போன்ற அணுசக்தி மற்றும் ஆயுத முக்கியத்துவம் உள்ள தாதுப் பொருள்கள் கிடைக்கும் நிலத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது நீண்டகால நோக்கில் கவலைக்குரியதாகும்.

சுரங்கமும் அதன் தாக்கமும்: குறையுள்ள குழந்தை, துரத்தும் புற்றுநோய்

கேரளா மற்றும் தமிழகக் கடற்கரையில் இல்லுமினேட், ருட்டைல், ஜிர்கான் என்று மூன்று தாதுப்பொருள்கள் பொதுவாகக் கிடைக்கின்றன. பல தொழில் நிறுவனங்கள் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடற்கரை மணலை அள்ளியெடுத்துத் தொழில்செய்து வருகின்றன. தோரியம் உள்ளிட்ட கதிரியக்கத் தனிமங்களைப் பிரித்தெடுக்கும் தொழில் கொல்லம் மாவட்டத்தில் பரவலான ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தியுள்ளது. குறையுள்ள குழந்தைகள் பிறப்பது, கூடுதல் புற்றுநோய்த் தாக்குதல் முதலியவற்றுக்கான அபாயங்கள் பரவலாக இருக்கின்றன.

டைட்டானியம், டைட்டானியம் ஆக்சைடு என்ற அதன் ஆக்சைடு வடிவத்தில் இரும்பு மற்றும் யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களுடன் கிடைக்கிறது. இயற்கையான அமைப்பை நாம் தொந்தரவு செய்யாத வரையில் கதிரியக்கத் தனிமங்களின் நிலைத்தன்மை பாதிக்கப்படாதவரையில் அவை அபாயகரமான கதிரியக்கத்தை வெளிப்படுத்துவதில்லை. தோண்டி எடுத்து அவற்றைப் பிரித்தெடுத்துச் சுத்தம்செய்யும்போது, அவை கதிரியக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அதன் காரணமாகத் தொழிலாளர்களும் அருகாமை மக்களும் புற்று நோய் மற்றும் குறையுள்ள குழந்தைப் பிறப்புகளுக்கு ஆளாகிறார்கள்.


நிர்வாணமாகும் பூமி

டைட்டானியம் வழக்கமாக 'நிர்வாணச் சுரங்க முறை'யில் எடுக்கப்படுகிறது. அதாவது புவிப் பரப்பின்மீதுள்ள அனைத்துத் தாவரங்களும் அழித்தொழிக்கப்பட்டு, பூமியை நிர்வாணமாக்கி, தாதுக்களைத் தோண்டியெடுக்கிறார்கள். மேல் மண்ணை அகற்றி வைத்துவிடுவார்கள். தாதுப்பொருள் அடங்கிய கீழ் மண் எவ்வளவு ஆழம்வரை கிடைக்கிறதோ அதனை எடுத்து முதல் கட்டச் சுத்திகரிப்புக்கு அனுப்புவார்கள். தூத்துக்குடியில் வெளி வரும் செய்தித்தாள்கள் 6 மீட்டர் முதல் 20 மீட்டர்வரை தோண்டப்படும் எனச் செய்தி வெளியிட்டுள்ளன. நமது அரசியல்வாதிகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் பணப்பசியையும் டாடாவின் பணபலத்தையும் பார்க்கும் எவரும் ஆழம் பற்றிய எந்தக் கணக்கும் செல்லுபடியாகாது என்பதைப் புரிந்துகொள்வார்கள். பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது உண்மையாகும்.

நிர்வாணச் சுரங்கம் உள்ளூர்ச் சுற்றுச்சூழல்மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆழமாகத் தோண்டுவது நிலத்தடி நீர்வளத்தைப் பாதிக்காது என்றாலும், நிலத்தடியை ஒட்டிய ஆழக்குறைவான நீர்வளமும் ஓடைகளும் வடிகால்களும் குளங்களும் மறைந்துபோக நீர்வளம் குறைய ஆரம்பிக்கும்.

நிலத்தடியில் 50 மீட்டரில் கடும்பாறைகள் இருக்கின்றன என்று உள்ளூர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடற்பஞ்சு போல நீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் மணலை அகற்றுவது அப்பகுதியின் நீர்ச்சமநிலையைப் பாதிக்கும். இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் தேரிகளையே நம்பியுள்ளது.


நிலத்தின் மீதுள்ள தாவரங்கள் அகற்றப்படும்போது, வெப்பம் நேரடியாகப் பூமியைத் தாக்கும். அருகாமைக் கடலிலிருந்து வரும் குளிர்ந்த காற்று வெப்பமடையும். இதன் காரணமாக உள்ளூர் மழையின் அளவும் தன்மையும் முறையும் மாற்றமடையும். அனைத்தையும்விட மிக முக்கியமானது, கடல் அருகாமையில் இருப்பதால் நிலத்தடியில் கடல் நீர் புகுவதே. இதனால் குடிப்பதற்கும் வாழ்வதற்குமான நீர் அரிய பொருளாகிவிடும். நிர் வாணச் சுரங்கத்தால் எழும் தூசு அருகாமைத் தாவரங்களில் படிந்து ஒளிச்சேர்க்கையைத் தடுத்து, இருக்கும் பசுமையையும் சாகடிக்கும்.



தாதுக்களைச் சுத்தம் செய்தல்
தாதுப்பொருள்களுயும் தேவையற்ற மணலும் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்திப் பிரிக்கப்படுகிறது. பெருமளவு நீருள்ள தொட்டியில் தோண்டியெடுக்கப்பட்ட மணல் கொட்டிக் கலக்கப்படும்போது, கனமான தனிமங்களான ஜிர்கான், இல்லுமினேட், மோனோ சைட், ரூட்டைல் போன்றவை கீழே தங்கிவிட லேசான மணல் மேல்பகுதியில் மிதக்கிறது. அந்தத் தேவையற்ற மணல் வெளியேற்றப்படுகிறது.


டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி
வணிகத் தேவைக்கான டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி இரண்டு வழிகளில் நடைபெறக்கூடும். ஒன்று சல்பேட் முறை, மற்றது குளோரைடு முறை. இந்த இரண்டு முறைகளுமே கடும் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியவை. விவசாயத்தையும் மீன் வளத்தையும் அழிக்கக் கூடியவை. இந்த முறைகளில் மிக அபாய கரமானது சல்பேட் முறையாகும். இந்த இரண்டு முறைகளில் குளோரைடு முறையையே டாடாக்கள் பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

இந்த முறையில் குளோரைடு மற்றும் ஆக்சிஜன் நிரப்பி இல்லுமினேட் எரிக்கப்பட்டு டைட்டானியம் டெட்ரா குளோரைடு என்ற வாயு பெறப்படும். இதனை வடித்தெடுத்து ஆக்சிஜனோடு இணைத்து எரிக்கும்போது, டைட்டானியம் டை ஆக்சைடு கிடைக்கும். அதோடு சேர்ந்து குளோரின் வாயுவும் உற்பத்தியாகும். உற்பத்தியில் மீண்டும் மீண்டும் குளோரின் பயன்படுத்தப்படும் என்றாலும் வாயுக் கசிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. நிலம், நீர், காற்றில் குளோரின் கலப்பது தவிர்க்க முடியாதது.



இந்த உற்பத்தி முறையில் வெளியேறும் மற்ற முக்கியப் பொருள்கள்: ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், குளோரின் வாயு, அமிலத் தன்மையுள்ள சகதி, சல்பர் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, கன உலோகங்கள் நிறைந்த திடக்கழிவுகள், அமிலத் தன்மையுள்ள திரவக் கழிவுகள் மற்றும் காற்றில் மிதக்கும் திடப்பொருள் துகள்கள். டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தியில் வெளியாகும் கழிவுகளில் அலுமினியம், ஆண்டிமணி, ஈயம், மோலிப்டனும் போன்றவை மிகக்குறைந்த அளவில் இருக்கும். இந்த உலோகங்கள் காற்றில் மிதக்கும் தூசுக்களிலும் இருக்கும். இந்த மிகக்குறைந்த அளவே போதுமான அபாயத்தை விளைவிக்கும். இவை நுரையீரலில் மிகக்குறைந்த அளவு நுழைந்தால்கூட, நீண்ட காலப்போக்கில், சரிசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

சல்பர் டை ஆக்சைடு உள்ளூர் அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அது அந்தப் பகுதியில் அமில மழையை ஏற்படுத்தும். வெளியேறும் திடக்கழிவுகள் நிலத்தையும் நீரையும் கடலையும் நஞ்சாக்கும்.


இந்த முறையில் இரும்பு குளோரைடும் உற்பத்தியாகும். இதனை முறையாகப் பாதுகாத்து வைக்கவில்லை என்றால், அது சுற்றுச்சூழலில் கலந்துவிடும். கேரளாவில் சவரா என்னும் ஊரில் கேரளா மினரல் & மெட்டல் என்னும் நிறுவனம் டைட்டானியம் ஆலையை நடத்தி வருகிறது. அந்த ஆலையிலிருந்து வெளியேறிய கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்திவிட்டன என்று உச்ச நீதி மன்றக் கண்காணிப்புக் குழு 2004இல் குற்றஞ்சாட்டியது. தற்போது அந்த ஆலையைச் சுற்றியுள்ள ஊர்களிலுள்ள மக்கள் ஆலை கொண்டுவந்து அளிக்கும் நீரை நம்பியே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.


குளோரைடு முறையில் டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படும்போது, 76 கிலோ சல்பர் டை ஆக்சைடும் 1 டன் திடக் கழிவுகளும் 2.7 கிலோ திரவக் கழிவுகளும் உற்பத்தியாகும்.

மிகுந்த கவனத்திற்குரியது குளோரைடு முறையின் மூலம் டைஆக்சினும் (dioxins) ஃபுரானும் (furans) உற்பத்தியாகும் என்பதே. குளோரைடு முறை இந்த விஷ வாயுக்களையும் உற்பத்தி செய்யும் என்று ஐக்கிய நாட்டுச் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் கூறுகிறது. அறிவியலுக்குத் தெரிய வந்த மிகக்கொடூரமான நச்சுத் தன்மைகொண்ட 100 வேதிப்பொருள்களின் பட்டியலில் இந்த இரண்டு பொருள்களும் இடம்பிடித்துள்ளன. இவை புற்றுநோயை உண்டாக்குவதோடு குறைபாடுகளுள்ள குழந்தைகள் பிறப்பதற்கும் காரணமாகின்றன. மிகக் குறைந்த அளவு டைஆக்சின் உடலில் நுழைந்தால்கூட அது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை ஒழித்துக்கட்டிவிடுகிறது. இதன் காரணமாக இப் பொருளை வேதியல் எய்ட்ஸ் என்று கூறுகின்றனர். வைரசுக்குப் பதிலாக டைஆக்சினும் ஃபுரானும் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை ஒழித்து மனிதர்களை மரணத்தின் பிடிக்குள் தள்ளுகின்றன.


டைட்டானிய உற்பத்தியின் ஆபத்தும் எதிர்ப்புப் போராட்டங்களும்

வழக்கமான ஆலை மாசுபாடுகளுக்கு அப்பால் அபாயகரமான கழிவுகளின் தாக்குதலுக்கும் மக்கள் ஆட்பட வேண்டியிருக்கும். டைட்டானியம் டெட்ரா குளோரைடு ஒரு பிரச்சினைக்குரிய வாயுவாகும். அது நீருடன் கடுமையான வினையாற்றி ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை உருவாக்கும். ஹைட்ரஜன் குளோரைடு தரையைத் தழுவியபடியே பயணித்துப் பெரிய பகுதிக்குப் பரவும். அது பரவும் இடம் முழுவதும் மரணம் பரவும். எத்தனை சிறப்பாகப் பராமரிக்கப்படும் ஆலையிலும் விபத்து ஏற்படுவது இயற்கை என்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாது என்று 100 சதம் உத்திரவாதம் தர முடியாது.
2006 ஆகஸ்ட்டில் சீனாவின் ஜிங்சூ மாகாணத்தில் டைட்டானியம் ஆலை நானி ஆற்றில் 3000 டன் சுத்தி கரிக்கப்படாத கழிவை வெளியேற்றிய குற்றத்திற்காக மூடப்பட்டது. அந்தக் கழிவு ஆற்றைக் கொன்று போட்டது. ஆற்றங்கரையில் உள்ள ஊர்மக்கள் அனை வரும் பாதிக்கப்பட்டனர்.

1999இல் இங்கிலாந்தின் டைட்டானிய உற்பத்தி ஆலை ஒன்றில் விபத்து ஏற்பட்டது. குழாய் உடைந்ததால் 8 ஆயிரம் டன் திரவக் கழிவு வெளியேறியது. அதில் 37 டன் அடர்த்தியான ஹைடிரோ குளோரிக் அமிலமும் அடக்கம். விளைவாக 17 ஏக்கர் நிலம் பயனற்றுப்போனது.

அமெரிக்காவின் தெற்கு ஜார்ஜியாவில் பழங்குடியினர் பகுதியில் டூபாண்ட் நிறுவனம் டைட்டானியம் தோண்டியெடுக்க 1999இல் முயற்சி செய்தது. ஆனால், பழங்குடி மக்களின் போராட்டத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்டது.

நிலத்தடி நீர் கெட்டுப்போனது மற்றும் குறைந்துபோனது என்று காரணம் காட்டி மத்திய வியட்னாமின் கிராம மக்கள் 2006இல் டைட்டானியம் தோண்டியெடுப்பதை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தினர்.

கென்யாவின் கடற்கரைப் பகுதியான க்வாலேவில் பழங்குடியினர் டைட்டானிய உற்பத்தியின் பாகசுரக் கம்பெனியான டியோமினுடன் (Tiomin) விடாப்பிடியான யுத்தம் நடத்திவருகின்றனர். தங்களது மூதாதையர் நிலத்தைத் தோண்டவிடமாட்டோம் என்று அவர்கள் போராடுகின்றனர்.

எது பெரியது?

எந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஏனென்றால் அனைத்து முறைகளும் ஆபத்தானவை. அவை சுற்றுச்சூழலையும் மனிதர்களின் நல்வாழ்வையும் பாதிக்கும்.

அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த டைட்டானியத் தொழிற்சாலை பற்றிய முக்கிய விவரங்களைப் பார்க்கத் தவறுகின்றன. நிலத்தை யார் வாங்குகிறார்கள் அரசா? டாடாவா? என்பதோ, தொழிலை யார் நடத்துகிறார்கள் அரசா? டாடாவா? என்பதோ முக்கியமல்ல. யார் தோண்டினாலும் டைட்டானியம் 30 ஆண்டுகளில் தீர்ந்துபோகும். டாடா உலகப் பணக்காரர்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிடுவார். அதே சமயம் அந்தப் பகுதியின் நீரும் தீர்ந்துபோயிருக்கும்.

எது பெரியது? எது முக்கியம்?

டைட்டானியமா? நீரா?

எவர் முக்கியமானவர்?

டாடாவா? மக்களா?



டைட்டானியம் இன்றி வாழ்ந்திருக்கிறோம். ஆனால், 
நீரின்றி அமையாது உலகு.


நன்றி

-நித்தியானந்த் ஜெயராமன்