புதன், 25 ஜனவரி, 2012


This Blog
Linked From Here
The Web
This Blog
 
 
 
 
Linked From Here
 
 
 
The Web
 
 
 

Monday, August 23, 2010

 

ஆனந்த சுதந்திரம்... ...அடைந்து விட்டோமா?

இந்தியாவின் 63வது சுதந்திர தினத்தை கொண்டாடும் சூழலில், இந்த சுதந்திரம் அனைத்து இந்தியர்களுக்கும் பயன் அளித்திருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஊழலில் திளைக்கும் அரசியல் சூழலையும், நிராதரவாக நிற்கும் ஏழை – பாமர குடிமக்களையும் பார்க்கும்போது இது குறித்தெல்லாம் இந்திய விடுதலைப் போராளிகள் சிந்தித்து இருப்பார்களா? என்று தோன்றலாம்.

ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் மிகுந்த தொலைநோக்குடன் இந்தியாவின் இன்றைய நிலை குறித்து சிந்தித்ததுடன் அதை பதிவும் செய்திருக்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் கூட்டத்தில் 1949ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி உரையாற்றிய அறிஞர் அம்பேத்கார், இன்றைய இந்தியாவின் நிலை குறித்து தமது ஐயங்களை மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

“1950 ஜனவரி 26ம் தேதி முதல் இந்தியா மக்களாட்சி நாடாக செயல்பட தொடங்கும். அதாவது மக்களுக்காக, மக்களால், மக்கள் அரசு செயல்படத் தொடங்கும். அந்த நாளில் முரண்பாடுகளோடு கூடிய வாழ்விற்குள் நாம் நுழைய இருக்கிறோம். நம்மிடம் அரசியல் ரீதியான சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக – பொருளாதார ரீதியான சமத்துவம் இருக்காது. அதற்கு பதிலாக சமூக – பொருளாதார நிலையில் இந்தியர்களிடம் ஏராளமான முரண்பாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும்.”

“எவ்வளவு நாட்களுக்கு இவ்வாறு சமூக – பொருளாதார முரண்பாடுகளோடும், ஏற்றத்தாழ்வுகளோடும் நம்மால் வாழ முடியும்? சமூக – பொருளாதார நிலைகளில் சமத்துவத்தை எவ்வளவு நாட்களுக்கு மறுக்க முடியும்? சமூக – பொருளாதார சமத்துவம் தொடர்ந்து மறுக்கப்பட்டால், அதனால் பாதிக்கப்படுபவர்கள் செயலற்று, சும்மா இருந்து விட மாட்டார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்த அரசியல் ஜனநாயக அமைப்பை, இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுக்குநூறாக தகர்த்து எறிவார்கள்!” என்று மாமேதை அம்பேத்கார் தீர்க்கதரிசனத்துடன் இன்றைய இந்தியாவின் நிலையை அன்றே முன்னறிவித்தார்.

இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியாக “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் தொகுத்தார். இந்த நெறிமுறைகளை இந்திய அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவார்கள் என்று நம்பினார். எனினும் பிறந்து சில காலமே ஆன இந்திய குடியரசின் தோள்களில் கூடுதல் சுமையை ஒரேயடியாக சுமத்தக்கூடாது என்ற அடிப்படையில், “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை”களை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு எதனையும் அவர் விதிக்க விரும்பவில்லை. மேலும் இதில் கூறப்பட்டுள்ள விடயங்களை அரசு உடனடியாக வலியுறுத்தி குடிமக்கள் வழக்கு தொடுப்பதற்கும் வகையில்லாத நிலையில் இந்த அத்தியாயத்தை படைத்தளித்தார். ஆனாலும் “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்” என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களை அம்ல்படுத்தாமல் புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அம்பேத்கார் எச்சரித்தார்.

இந்திய அரசியல்வாதிகளைப்பற்றி அம்பேத்கார் கொண்டிருந்த ஐயம் நியாயமானதே என்று காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடுதல்; இவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தல்; ஏழை, பாமர, உழைக்கும் மக்களை ஏமாற்றி, அவர்களின் உடைமைகளை, உழைப்பை சுரண்டுதல்; தொழிலாளர்கள், பணியாளர்களின் உடல் நலம் குறித்து அக்கறையற்று இருத்தல்; குழந்தைகளுக்கு கல்வி மறுத்து அவர்களையும் உடல் உழைப்பு தொழிலாளிகளாக்குதல்; கல்வி, வேலை வாய்ப்பை மறுத்தல்; தொழிற்சாலை நிர்வாகத்திலிருந்து தொழிலாளர்களை அகற்றுதல்; பட்டியல் இனமக்களையும், பழங்குடியினரையும் ஏமாற்றி வஞ்சித்து சமூக அநீதி புரிதல்; சுயச்சார்பு வேளாண்மையை திட்டமிட்டு அழித்து இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக்குதல்; சுற்றுச்சூழலை, வனங்களை, வன உயிரிகளை பாதுகாப்பதற்கு பதிலாக அவற்றை திட்டமிட்டு அழித்தல்; சுயேச்சையாக செயல்படவேண்டிய நீதித்துறையை அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக மாற்றியமைத்தல் ஆகிய மக்கள் விரோத பணிகளையே இந்தியாவை இதுவரை ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் தொடர்ந்து செய்து வருகின்றன.

அரசின் மேற்கண்ட நடவடிக்கைகளால் நாட்டில் வசிக்கும் அனைத்து தரப்பினரும் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருப்போம். ஆனால் மிக மோசமாக பாதிக்கப்படுபவர்கள் பழங்குடி இனத்தவரும், பட்டியல் இனத்தவருமே

சத்தீஷ்கர், ஜார்கண்ட், ஓரிஸா, ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மலை மற்றும் வனப்பகுதிகளில் இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியம், பாக்சைட், நிலக்கரி, சிலிகா, கிரானைட் போன்ற அரிய கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. இந்த இயற்கை வளங்களை சூறையாடும் வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும் அரசு அமைப்புகள் முனைந்து நிற்கின்றன.

இப்பகுதி மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதியையும் செய்து தராத அரசு அமைப்புகள் இம்மக்களின் வாழ்வுரிமையை பறித்தெடுப்பதில் முனைந்து நிற்கின்றன.

இதைப் புரிந்து கொண்டால் இந்தியாவில் தீவிரவாதம் உருவாவதற்கு மத்திய, மாநில அரசுகளின் நடைமுறைகளே காரணம் என்பது விளங்கும்.

---
“இந்தியாவின் பழங்குடி சகோதரர்களும், சகோதரிகளும் மிகநீண்ட காலமாகவே அரசு நிர்வாகம் என்பதை அராஜக நடைமுறைகளும், ஆதிக்க மனோபாவமும் கொண்ட வனத்துறை அதிகாரியாக – கொடூரமான மிருகத்தன்மை கொண்ட காவல்துறை அதிகாரியாக – பேராசை படைத்த நிலவரி வசூலிக்கும் அதிகாரியாக மட்டுமே பார்த்து வந்துள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இம்மக்களை சென்றடையவில்லை. மாறாக வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் இம்மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டே வந்துள்ளது!” என்று வி.ஐ.பி. ஒருவர் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த வி.ஐ.பி., அருந்ததி ராய் போன்ற எழுத்தாளரோ, மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர்களோ, மனித உரிமை ஆர்வலர்களோ இல்லை.

இறையாண்மை கொண்ட இந்திய அரசின் பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள்தான் மேற்சொன்ன கருத்துகளை, ஒப்புதல் வாக்குமூலமாக கூறியுள்ளார். மாவோயிஸ்ட்களால் வளர்ச்சித்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம் கடந்த 2010 ஜூலை 14ம் தேதி டெல்லியில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திருவாளர் மன்மோகன் சிங் அவர்கள்தான் மேற்கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். ஆனால் இதை மாற்றுவதற்கான ஆக்கப் பூர்வமான வழிகள் எதுவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக ஆயுதப்படைகளை அதிகரிக்கும் போக்கே நிலவி வருகிறது.

இந்திய சுதந்திர போராளிகளின் கனவுகளை, அம்பேத்காரின் திட்டங்களை தவிடுபொடியாக்கி, தீவிரவாதத்திற்கு வித்திட்டு, நீர் வார்த்து, உரமிட்டு வளர்த்தவர்கள் அதற்கான காரணங்களை அறிந்தும், அது குறித்து முழுமையா ஆய்வு செய்யாமல் கலைந்து சென்றனர்.

---

ஒரிஸா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்தில் ஏராளமான நிலக்கரி வளம் உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கடந்த 1987ம் ஆண்டு மத்திய அரசு கையகப்படுத்தியது. இந்தியாவின் நவரத்தினங்கள் என்று கூறப்படும் மிகச்சிறந்த நிறுவனங்களி்ல் ஒன்றான இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்திடம் இந்த நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இப்பகுதி மக்களுக்கு உரிய இழப்பீடும், மாற்று குடியிருப்பு வசதிகள், சாலை போன்ற அடிப்படை வசதிகள், கல்வி – மருத்துவம் போன்ற அத்தியாவசிய வசதிகள், வேலைவாய்ப்பு போன்றவை செய்து தருவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

அப்பகுதி மக்கள், விவசாயத்தை புறக்கணிக்க நிர்பந்தம் செய்யப்பட்டனர். அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களது நிலங்களில் புழங்கும் உரிமை ஆயுத முனையில் பறித்தெடுக்கப்பட்டது. அத்துமீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

ஆனால் அரசு வாக்குறுதி வழங்கியபடி இழப்பீடோ, மற்ற வசதிகளோ இந்த கட்டுரை எழுதப்படும் இன்றுவரை செய்து தரப்படவில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்வாதாரங்களை தியாகம் செய்துவிட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக நின்ற அம்மக்கள் ஒரிஸா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மிக நீண்டகாலம் நடைபெற்ற வழக்கில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரிஸா உயர்நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு தீர்ப்பளித்தது. சுமார் 20 ஆண்டுகள் வாழ்விழந்து தவித்த அம்மக்களுக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம்.

இந்த மேல்முறையீட்டு மனுவை மூன்று ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த கடந்த 2010 ஜூலை 19ம் தேதியன்று தீர்ப்பளித்தது. இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள அம்பேத்காரின் கருத்துகளுடன் தீர்ப்பை ஆரம்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஃடாப் ஆலம் மற்றும் பி. எஸ். சவுகான் ஆகியோர் ஒரிஸா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளனர்.

இலட்ச கணக்கான இந்தியர்களின் அடிப்படை வாழ்வுரிமைகளை பறித்து இந்திய அரசு உருவாக்குவதாக கூறும் துர்வளர்ச்சி காரணமாக, குடிமக்களுக்கு வளர்ச்சி என்ற சொல்லே வெறுக்கக்கூடியதாக, அச்சமூட்டக்கூடியதாக மாறிவிட்டதை நீதிபதிகள் இந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் அரசின் இவ்வாறான ஒவ்வொரு பொறுப்பற்ற செயல்பாடும் தீவிரவாத அரசியலுக்கும், புரட்சிகர செயல்பாடுகளுக்கும் வித்திடுவதையும் நீதிபதிகள் குறிப்பிட்டு காட்டுகின்றனர்.

மாபெரும் தொழில்திட்டங்களுக்காக கட்டாயமாக இடம் பெயர்க்கப்படும் மக்களுக்கு தேவையான சாலை, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்படும் அவலத்தையும் நீதிபதிகள் இந்த தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு சமூக அவலத்தை விமரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதற்கான காரணத்தையோ, தீர்வுகளையோ முழுமையாக விவாத்தித்தார்களா என்பது கேள்வியே

மாமேதை அம்பேத்காரின் தீர்க்கதரிசனம், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு ஆகிய அனைத்தும் நாட்டில் தீவிரவாதம் உருவாவதற்கான காரணங்களை தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. ஆனால் இவற்றை திரும்பியும் பாராமல் தீவிரவாதிகளை ஒடுக்கவதற்காக பசுமை வேட்டை போன்ற ஆட்கொல்லித் தீர்வுகளை அரசு அமைப்புகள் முன்வைக்கின்றன.

இந்த அவலச் சூழலில் இந்தியாவின் 63வது சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது. சுயேச்சையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டிய பத்திரிகைத்துறையும், நீதித்துறையும் கண்ணுக்குத் தெரியாத கட்டுப்பாடுகளுக்குள் சிக்கியிருக்கின்றன.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களும் ஏதோவொரு சுரண்டலுக்கு ஆளாகியே வாழ்ந்து வருகின்றனர்.

இதுதான் ஆனந்த சுதந்திரமா? இதற்குத்தான் சுதந்திரப் போராளிகள் ஆசைப்பட்டனரா? சுதந்திரப் போராளிகளின் கனவுகளை நனவாக்குவதில் குடிமக்களுக்கு பங்கு உள்ளதா?


இந்தியாவின் இன்றைய அவல நிலையை மாற்றுவதில் இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் பங்குள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை மனித உரிமைப் பார்வையில் கற்றுக் கொள்வதும், மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதுமே இன்றைய தேவை. இது ஆட்சித்துறை, நீதித்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மிகமுக்கிய தேவையாகும்.

இவ்வாறு கற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு அரசு அமைப்புகளை தொடர்ந்து வலியுறுத்துவதும், தேவையான இடங்களில் போராடுவதுமே இந்திய சுதந்திரப் போராளிகளின் கனவுகளை நனவாக்கும். இல்லாவிட்டால் ஆகஸ்ட் 15 என்பது மூவண்ண கொடியேற்றும் ஒரு விடுமுறை நாளாக மட்டுமே இருக்கும். 

-பி. சுந்தரராஜன்
(sundar@LawyerSundar.net)


செவ்வாய், 3 ஜனவரி, 2012

ஆபரேஷன் இன்றி சிறுநீரகக்கற்கள்

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன்.
அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம்.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.
வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).
இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…
நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன

உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
முன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம். ஒரு கட்டத்தில் கிணறுகள் குறைந்து அடிபம்புகள் வந்தன. அதற்கடுத்து ஜெட்மோட்டார்கள், சப்மர்சிபிள் என்று பூமியின் ஆழத்தில் கிடக்கும் மோட்டார் கொண்ட ஆழ்துளை குழாய் என்று படிப்படியாக உருமாறின. இந்த மோட்டார்களில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சம் கிணற்றுக்கு உண்டு.
அது, கிணற்றில் ஊறும் தண்ணீர் கண்ணாடி போல் நமது பார்வையில் தெளிவாக இருக்கும்.  உச்சி வேளையில் கிணற்று தண்ணீரில் சூரியனின் ஒளி பிரதிபலித்து சில நேரங்களில் கிணற்றின் அடி ஆழம் வரை தெரியும்.  இது ரம்மியமான காட்சியாக இருக்கும்.
இப்போது இப்படி இருந்த கிணறுகள் எல்லாம் பெரும்பாலும் மறைந்து விட்டன. கிராமப்புறங்களில் விவசாயத்திற்காக மட்டும் தான் தற்போது கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. கிணறுகள் திறந்த நிலையில் இருந்ததால், தண்ணீரில் ஏற்படும் மாற்றத்தை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, செழிப்பாக மழை பெய்திருந்தால் கிணற்றில் ஊறும் தண்ணீரானது எங்கள் வீட்டில் இருந்த கிணற்றில் செம்மண் நிறத்தில் இருப்பது வழக்கம்.
ஆனால் தற்போது உள்ள போர்வெல் குழாய்கள் நீரை இழுத்து நேரடியாக தொட்டியில் நிரப்புவதால் மாடிக்கு சென்று தொட்டியில் ஏறிபார்த்தால் மட்டுமே நீரின் தெளிவு, சுத்தம்,நிறம் போன்றவற்றை காண முடியும். எனவே, நம்மால் பல நேரங்களில் தண்ணீரின் இயல்பை தெரிந்து கொள்ள முடியாமல் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால் தண்ணீரை பற்றி நாம் மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. அதை கேள்வி பதில் வடிவத்தில் தொகுத்துள்ளேன். தமிழக அரசின் நிலநீர்பிரிவு வெளியிட்டுள்ள இந்த தொகுப்பு சொல்லும் தகவல்கள் இதோ….
  • 1.சமீபகாலமாக பல் காவி நிறமாகிறது. ஏன்?
  • நீங்கள் குடிக்கும் நீரில் புளோரைடு என்ற உப்பு அதிகமாக இருக்கலாம். இந்த புளோரைடு உப்பு பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும். குடிக்கும் நீரில் ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு அதிகமாக புளோரைடு இருக்க கூடாது. இந்த அளவிற்கு மேல் புளோரைடு அதிகம் இருக்கும் நீரை கண்டிப்பாக குடிக்க பயன்படுத்த கூடாது.
  • 2. புளோரைடு அளவுகோல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் கூறவும்?
  • குறைந்த புளோரைடு அளவு என்பது (0.5-1.0 மிகிராம் லிட்டர்) இந்த அளவு இருந்தால் அது பற்களுக்கு பாதுகாப்பானது. இந்த அளவு புளோரைடு இருந்தால் அது பல் சொத்தை விழாமலும், பல்லில் துர்நாற்றத்தையும் தடுத்து விடுகிறது. ஆனால் 1.5 என்ற அளவை விட குடிநீரில் புளோரைடு அதிகம் இருந்தால் அந்த நீரை குடிப்பவர்களுக்கு பல் காவி நிறமாகும். உடலின் எலும்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் என்ற நோய் உருவாகி செயலற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். புளோரசிஸ் என்ற நோய் ஏற்படும்.
  • 3. பிறந்து ஆறு மாதம் ஆன சில குழந்தைகள் நீலமேறுதல் மற்றும் திடீரென்று இறந்து போவதின் காரணம் என்ன?
  • குடிக்கும் நீரில் அதிகமான நைட்ரேட்டு என்ற ரசாயன உப்பு இருந்தால் குழந்தைகள் திடீரென்று உடலில் நீலநிறம் பாய்ந்து இறந்து போவதுண்டு.
  • 4. வீட்டின் மேல்நிலை தொட்டிகளில் அடிக்கடி பாசி படிகிறது. இது ஏன்?
  • காற்று,சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படும் மேல்நிலை தொட்டிகளில் இது போல் பாசி ஏற்படும். எனவே காற்று, சூரிய ஒளி படாமல் தண்ணீர் தொட்டிகளை நன்றாக மூடி வைத்திருக்க வேண்டும். கிணறுகளையும், நீர்தொட்டிகளிலும் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர்தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம் என்ற அளவில் சேர்க்கலாம்.
  • 5. சில நேரங்களில் சமைக்கும் போது சோறு மஞ்சள் நிறமாக ஆகிவிடுகிறதே ஏன்?
  • நீரின் காரத்தன்மை (alkalinity) அதிகமாக இருந்தால் சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருக்கும். பருப்பும் சரிவர வேகாது.
  • 6.நீரினை பிடித்து சேகரித்து வைக்கும் போது, மஞ்சள் நிறமாக இருக்கிறது. இந்த தண்ணீரில் துணிகளை துவைக்கும் போது காவி,பழுப்பு கறை ஏற்படுகிறது. எதனால்?
  • இது இரும்பு(iron) உப்பு இருப்பதால் நிகழ்கிறது. இரும்பு அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட சுத்திகரிப்பு நீர் தொட்டிகளை பயன்படுத்தி இரும்பு சத்தை குறைக்கலாம்.
  • 7. போர்வெல் தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்க தொட்டியில் தேத்தங் கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையை போட்டு வைக்கலாமா?
  • தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டை துவர்ப்பு சுவையுடையது. துவர்ப்பும், உப்பும் இருக்கும் போது நீரானது, உப்பு குறைந்துள்ளதாக தோன்றும். ஆனாலும் நீரில் குறைந்துள்ள ரசாயனங்களின் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.
  • 8. கழிவறை தொட்டி (செப்டிக் டேங்க்) மற்றும் ஆழ்குழாய் கிணறு(போர்வெல்) இவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு?
  • சுமார் 50 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
நீர்வழி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்
  • நீரை கொதிக்க வைத்து, குளிர வைத்து, வடிகட்டி பின்னர் குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.
  • நோய் கிருமிகளை அழிக்க பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தலாம் (1000 லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில்)
  • தொழிற்சாலை கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகள்(குப்பைகள்), கால்நடை கழிவுகள், நீர்நிலை ஆதாரங்களில் கலக்காமல் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைந்திருக்க வேண்டும்.
  • கைப்பம்புகள், குழாய்களை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழாய், போர்வெல்லின் அடியில் குளித்தல், மாடுகளை கழுவுதல், துணிதுவைத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • புளோரைடு நீரில் இருக்கும் அளவை கண்டிப்பாக தெரிந்து கொள்ள நீரை பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.
  • நீங்கள் சென்னைவாசி என்றால் கீழே உள்ள விலாசத்தில் உங்கள் போர்வெல் தண்ணீரை கொடுத்து அந்த தண்ணீரில் என்ன வகையான உப்புகள் எல்லாம் கலந்திருக்கின்றன. அது குடிக்க உகந்ததா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இது தவிர தமிழக்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் பரிசோதனை கூடங்களை அரசு அமைத்துள்ளது. அங்கே சென்று நீரின் தரத்தை பரிசோதித்து கொள்ளலாம்.
உதவி இயக்குநர், (நில வேதியியல்)
நிலவேதியியல் உட்கோட்டம்,
தரமணி,பொதுப்பணித்துறை வளாகம்,
தரமணி, சென்னை-600113
போன்:044-22541373


நன்றி: Green India Foundation

சிகரெட்டுக்கு நோ சொல்லுங்க!


வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டு, போய் ஒரு தம் அடித்துவிட்டு வரலாம் என்று எழுந்து செல்பவரா நீங்கள்? சற்றுப் பொறுங்கள். அதற்கு முன் இந்தக் கட்டுரையை படியுங்கள். சிகரெட் நுனியில் நீங்கள் பற்ற வைக்கும் தீ, நீங்கள் உங்களுக்கே வைத்துக்கொள்ளும் தீ என்பது புரியும்.
முதலில் சில புள்ளிவிவரங்கள்.
  • உலகம் முழுவதும் தற்போது 110 கோடி பேருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது.
  • 2025வாக்கில் இந்த எண்ணிக்கை 160 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஒவ்வொரு நிமிடமும் உலகில் 1 கோடி சிகரெட்கள் வாங்கப்படுகின்றன.
  • பதின் வயதில் (teenage) இருப்பவர்களில் ஐந்தில் ஒருவர் 13 வயதிலேயே புகைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
  • ஒவ்வொரு 8 விநாடிக்கும் ஒரு முறை புகையிலை பயன்படுத்தியதன் காரணமாக ஒருவர் இறக்கிறார். அதாவது வருடத்திற்கு 50 லட்சம் பேர்.
  • தமிழ்நாட்டில் புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்களில் 58 சதவீதம் பேருக்கு இதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றித் தெரியவில்லை.
உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று புகையிலை பயன்பாடு. புகையிலையை சிகரெட், ஹூக்கா, பொடி, அப்படியே மெல்லுவது என பல வடிவங்களில் மக்கள் பயன்படுத்திவருகிறார்கள். இப்படி புகையிலையின் பயன்பாடு அதிகரித்தபடியே இருப்பது உலகம் முழுவதும் இருக்கும் சுகாதார இயக்கங்களுக்கு கவலையளித்திருக்கிறது.
புகையிலையைப் பயன்படுத்துவதால் உடலின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. உடலின் ஒட்டுமொத்த நலனே பாதிக்கப்படுகிறது. இளைஞர், வயதானவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாத் தரப்பினரிடமும் புகைபிடிக்கும் பழக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. புற்றுநோய், வாய் புற்றுநோய், வயிறு, சிறுநீர் பை, சிறுநீரகம், குடல் பகுதிகளில் புற்றுநோய், ஆண்மைக் குறைவு, இதயநோய்கள், பக்கவாதம் போன்றவை புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும்.
புகையிலையை ஒரு சில தடவைகள் பயன்படுத்திவிட்டு விட்டுவிடலாம் என்று இருக்க முடியாது. புகையிலையைப் பயன்படுத்துபவர்கள் மிக எளிதில் அதற்கு
 
அடிமையாகிவிடுவார்கள். புகையிலையில் இருக்கும் நிகோடின் மீண்டும் மீண்டும் அதைப் பயன்படுத்தத் தூண்டும். நிகோடின் மூளையில் ஏற்படுத்தும் ரசாயன மாற்றம் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். உடலில் நிகோடின் குறையக் குறைய, அந்த உற்சாகமும் குறையும். இதனால், நிகோடின் குறையும்போது மீண்டும் புகைக்கத் தோன்றும். இது முதலில் உணர்வுரீதியான வேண்டுதலாகவே இருக்கும். ஆனால், அடுத்தகட்டத்தில், இது உடல் ரீதியான வேண்டுதலாக மாற ஆரம்பிக்கும். சிகரெட் புகைக்காவிட்டால் உடலே சோர்வானது போலத் தோன்றும். பிறகு அந்த நபர் வாழ் நாள் முழுவதும் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்.
சிகரெட்டில் இருக்கும் நிகோடின் மட்டும்தான் உடலுக்குத் தீமை விளைவிக்கும் ரசாயனம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நிகோடின் தவிர சிகரெட் புகையில் தாரும் இருக்கிறது. இந்தத் தார் சுமார் 4,000 ரசாயனங்களைக் கொண்டது. சயனைடு, பென்சீன், ஃபார்மால்டிஹைடு, அசிட்டிலின், அம்மோனியா போன்ற இந்த ரசாயனங்கள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை. நுரையீரல், இதயம், எலும்பு, தோல் ஆகியவற்றில் நோய்களை உருவாக்கும் தன்மை கொண்டவை.
 
புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. தொடர்ந்து சிகரெட் குடிப்பவர் சில மணி நேரம் சிகரெட் குடிக்காமல் இருந்தாலே, தலைவலி, எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதயத் துடிப்பு குறைவது, இரத்த அழுத்தம் குறைவது போன்றவையும் ஏற்படும். மிகுந்த மன உறுதியும் தகுந்த சிகிச்சை முறைகளுமே சிகரெட்டிலிருந்து விடுதலை பெற உதவும்..
உடல்நல காரணங்கள், வாழ்க்கைச் சூழல் மாற்றம், குழந்தை, சிகரெட்டின் விலை உயர்வு, சிகரெட் பழக்கத்தால் குடும்பத்தில் யாராவது இறந்துபோவது போன்ற காரணங்களால் பலர் சிகரெட் குடிப்பதை விடுகிறார். மன உறுதியின்மையால்தான் பலரால் அந்தப் பழக்கத்திலிருந்து வெளிவர முடிவதில்லை.
புகையிலையும் ஒரு போதைப் பொருள் என்றாலும் பிற போதைப் பொருள்களைப் போல சப்ளையே இல்லாமல் தடுப்பது என்பது இயலாத காரியம். இதனால், சு
காதார இயக்கங்களுக்கு இருக்கும் ஒரே வழி, புகையிலையால் ஏற்படும் தீமையைப் பற்றி பெரிய அளவில் விளம்பரம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான்.
இதனால், உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. புகையிலைப் பொருள்களின் மேலட்டையின் மீது படங்களுடன் கூடிய எச்சரிக்கையை வெளியிட வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இதனால், புகையிலைப் பழக்கத்தின் தீமை, படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் சென்று சேரும் என்று நம்புகிறது அந்த அமைப்பு. சிகரெட்டின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இம்மாதிரி நடைமுறைகள் புகையிலையின் தீமையைக் குறைக்க உதவும் என உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது.
புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தவென்று உலக சுகாதார நிறுவனம் விதித்திருக்கும் நடைமுறைகளை பல்வேறு நாடுகள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருப்பது நல்ல செய்தி. இந்தியாவிலும் மே 30க்குப் பிறகு தயாரிக்கப்படும் சிகரெட்  
பாக்கெட்களிலும் பிற புகையிலைப் பொருகளின் வெளி அட்டைகளிலும் அதன் தீமையை குறிக்கும் விதமான படங்களைப் பொறிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
புகைப்பிடிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் விலை வெறும் சிகரெட்டின் விலை மட்டுமல்ல. அதனால், ஏற்படும் உடல்நலக் கேடுகளைச் சரி செய்ய ஆகும் விலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் புகைப்பிடிப்பதை விட்ட ஒரு மாத்திலேயே உங்கள் உடல் நலத்திலும் பர்சிலும் மாற்றம் தெரியும்.

Consumer Protection Act 1986 tamil

Consumer Protection Act 1986
இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே – எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடைமுறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இனி அது பற்றி பார்க்கலாம்.
நுகர்வோர் நீதிமன்றங்களின் ( Consumer Court ) அமைப்பும், செயல்பாடும்:
கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இருப்பதை போலவே இச்சட்டப்படி – மாவட்ட அளவில் ” மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்”, மாநில அளவில் “மாநில ஆணையம்”, தேசிய அளவில் ” தேசிய ஆணையம்” அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:
20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பி னரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ள்படியாகும் நிலை ஏற் பட்டது. இதனால் தவ்றே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்ய்ப்பட்டு ள்ளது.
  • 1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-
  • 1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
  • 5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
  • 10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-
வழக்கு தொடர தேவையான தகுதிகள்:
  1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.
  2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.
  3.  புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்.
  4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.
யார் மீது வழக்கு தொடர முடியும்?
1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.
உதாரணம்: மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் – பைக் – கார் – லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.
2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.
உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனிகள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.
எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டிய்லிடப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப்பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவல்கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டிக்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால்த் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறைபாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல” என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபனையை நிராகரித்த் நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.
வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:
உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள்வு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே ” குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யாவிட்டால் நுகர்வோர் வழக்கு தொடரப்படும்” என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்புங்கள். அவருக்கு நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக்கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.
தரம் சம்பந்த பிரச்சனை என்றால், அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக் செய்ய்து வைத்துக்கொள்ளுங்கள்.
எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.
இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும். முன்பு குறிப்பிட்ட படியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி:-சட்டம் நம் கையில்


கிராம நுகர்வோர் மன்றங்களின் ஆலோசனை கூட்டம் nov 2011

ஊட்டி : கிராம நுகர்வோர் மன்றங்களின் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழு கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில் செயல்படும் கிராம நுகர்வோர் மன்றங்களின் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. மாவட்ட கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். செயலாளர் வீரபாண்டியன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். மன்ற அமைப்பாளர்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து பேசினர். எதிர்கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது; நீலகிரியில் மோசமாக உள்ள பெரும்பாலான கிராம சாலைகளை சீரமைக்க வேண்டும்; ஊட்டி நகர் பகுதிகளில் மழைநீர்கால்வாய்கள் தூர் வாரப்படாமல் உள்ளதால் மழை காலங்களில் நீர்தேங்கி பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும்; மருத்துவ துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்து நவீன மருத்துவ வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஊட்டி நகராட்சி போக்குவரத்து கழகம் ஆகியவை கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பிடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுப்பதுடன், சுகாதாரமான முறையில் இருக்க கண்காணிக்க வேண்டும்; சேரிங்கிராஸ், ஏ.டி.சி., பகுதிகளில் கூடுதல் கழி பிடங்கள் கட்ட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரம்

ஊட்டி: நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்-மக்கள் மையங்கள் சார்பில், நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.ஊட்டியில், மாவட்ட கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். மைய நிர்வாகி ராஜன் வரவேற்றார். சமையல் காஸ் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. கூட்டமைப்பு தலைவரும், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவருமான சிவசுப்ரமணியம், கூட்டமைப்பு பொதுச் செயலர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.

கூட்டமைப்பு மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், வசம்பள்ளம் நுகர்வோர் சங்கம், கிராம நுகர்வோர் மன்றங்கள், தேவர்சோலா நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், மக்கள் மையங்கள் சார்பில், மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, சுப்ரமணி, வீரபாண்டி, கூட்டமைப்பு நிர்வாகிகள் செல்வராஜ், வீரமணி, சுந்தரலிங்கம், கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகிகள், சத்யசீலன், கவிதா, மஞ்சுளா, ஜெயப்பிரகாஷ், ரமேஷ், ராஜேஷ், சீதாலட்சுமி, சிவகுமார், கணேஷன், மருதமுத்து பங்கேற்றனர். கோகிலா நன்றி கூறினார்.